“தவெக ஆட்சியை கவிழ்க்க ரூ.50 கோடி பேரம்…! திமுக, அதிமுக, பாஜக இணைந்து புதிய ஆட்சி…? அமைச்சர் நிர்மல்குமார் பகீர் குற்றச்சாட்டு…!”

By Swetha on ஆடி 16, 2026

Spread the love

தமிழகத்தில் தவெக ஆட்சியை கவிழ்க்க திமுக, அதிமுக மற்றும் பாஜக ஆகிய மூன்று கட்சிகளும் சேர்ந்து கடந்த 45 நாட்களாக சதி செய்து வருவதாக அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் அதிரடி குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தவெக அரசை எப்படியாவது செயலிழக்கச் செய்ய வேண்டும் என்பதற்காக குறுக்கு வழி முயற்சிகள் தினமும் நடந்து வருவதாகக் குறிப்பிட்டார். குறிப்பாக, தவெக எம்.எல்.ஏக்களை 30 முதல் 50 கோடி ரூபாய் வரை விலை பேசி குதிரை பேரத்தில் ஈடுபடும் முயற்சியில் பலர் ஈடுபட்டு வருவதாகவும் அவர் பரபரப்பை கிளப்பியுள்ளார்.

தொடர்ந்து பேசிய அமைச்சர், இன்னும் இரண்டு அல்லது மூன்று வருடங்களுக்குள் திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளும் தங்களது கட்சிகளை நடத்த முடியாமல் பாஜகவுடன் தங்களை இணைத்துக் கொள்ளும் வாய்ப்பு உள்ளதாகக் கணித்துள்ளார். அவ்வாறு இணையும் போது மு.க.ஸ்டாலின் குடும்பத்தில் இருந்து இருவருக்கும், எடப்பாடி பழனிசாமி குடும்பத்தில் இருந்து இருவருக்கும் மத்திய கேபினட் அமைச்சர் பதவிகளைப் பெற்றுக்கொண்டு அவர்கள் ஒதுங்கிவிடுவார்கள் என்றும் விமர்சித்தார். எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோர் உருவாக்கிய அதிமுகவை எடப்பாடி பழனிசாமி மொத்தமாக அடமானம் வைத்துவிட்டு, வெறும் லெட்டர் பேட் கட்சி போல நடத்திக் கொண்டிருக்கிறார் என்றும் அவர் சாடினார்.

   

இந்த ஆட்சி கவிழ்ப்பு சதித் திட்டம் தொடர்பாக ஏற்கனவே திருவல்லிக்கேணி போலீசாரால் வழக்குப்பதிவு செய்யப்பட்டு 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார். தவெகவின் ஊத்தங்கரை எம்.எல்.ஏ இளையராஜா மற்றும் உசிலம்பட்டி எம்.எல்.ஏ விஜய் ஆகியோரிடம் ஆதரவு கோரி பேரம் பேசப்பட்ட விவகாரத்தில் கணேசன் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு விசாரணை தீவிரமடைந்துள்ள சூழலில், அமைச்சரின் இந்த தற்போதைய கருத்துக்கள் தமிழக அரசியலில் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளன.