CINEMA
பொன்னியின் செல்வன் கதையை படமாக்க ஆசைப்பட்ட எம்.ஜி.ஆர்.. அதில் அவர் ஏற்று நடிக்கவிருந்த கதாபாத்திரம் என்ன தெரியுமா..?
பிரபல இயக்குனரான மணிரத்தினம் கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை இரண்டு பாகங்கள் கொண்ட படமாக எடுத்து வெற்றி பெற்றார். இந்த படத்தில் விக்ரம், கார்த்திக், ஜெயம் ரவி, ஜெயராம், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, விக்ரம் பிரபு உள்ளிட்டோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்தனர். இந்த படத்திற்கு ஏ.ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார்.
கடந்த 2022-ஆம் ஆண்டு செப்டம்பர் 30ஆம் தேதி பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகம் ரிலீஸ் ஆகி மாபெரும் ஹிட் ஆனது. பின்னர் 2023-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 28-ஆம் தேதி பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாவது பாகமும் ரிலீஸ் ஆனது. பொன்னியின் செல்வன் படத்தை எடுக்க ஆரம்ப காலகட்டத்தில் இருந்து சினிமாவில் ஏராளமானோர் முயற்சி செய்துள்ளனர்.
அந்த வகையில் பொன்னியின் செல்வன் நாவலை முதன்முதலாக படமாக்க வேண்டும் என ஆசைப்பட்டவர் எம்ஜிஆர். பொன்னியின் செல்வன் கதையை தானே இயக்கி நடிக்க வேண்டும் என ஆசைப்பட்டார். அதில் வந்திய தேவன் கதாபாத்திரத்தில் எம்ஜிஆர் நடிக்க இருந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. 1960-ஆம் ஆண்டு அந்த படத்திற்கான வேலையில் தான் தீவிரமாக ஈடுபட்டதாக எம்ஜிஆர் ஒரு பத்திரிக்கை பேட்டியில் கூறினார்.
அந்தப் படத்தை ஆங்கிலத்திலும் படமாக வேண்டும் என்ற எண்ணம் எம்.ஜி.ஆருக்கு இருந்தது. பொன்னியின் செல்வன் படத்தில் ஜெமினி கணேசன், சரோஜாதேவி, பத்மினி, சாவித்திரி, நம்பியார் என நட்சத்திர பட்டாளத்தை களமிறக்க நினைத்தார். எம்.ஜி.ஆர். நினைத்த கனவு அன்று நிறைவேறி இருந்தால் இன்று வரை பொன்னியின் செல்வன் பேசப்படும் படமாக அமைந்திருக்கும் என ஒரு பேட்டியில் சித்ரா லட்சுமணன் கூறியுள்ளார்.