CINEMA
நாடகக் கம்பெனியில் சிறுவனாக எம் ஜி ஆர் பட்ட கஷ்டங்கள்… பிரம்போடு அலையும் இந்த வாத்தியார் சொன்ன அந்த வார்த்தைதான் திருப்புமுனை!
தமிழ் சினிமாவில் 50 களில் இருந்து 77 வரை தொடர்ந்து 25 ஆண்டுகளுக்கும் மேலாக முடிசூடா மன்னனாக விளங்கியவர் எம் ஜி ஆர். நடிப்பு மட்டும் இல்லாமல் இயக்கம், பாடல்கள் என பலதுறைகளில் வித்தகராக இருந்தவர் எம் ஜி ஆர். அதனால்தான் அரசியலுக்கு வந்தபோதும் அனைவரையும் தன் கட்டுப்பாட்டில் வைத்து தொடர்ந்து மூன்று தேர்தல்களில் வெற்றி பெற்று முதல்வராக இருந்தார்.
ஆனால் எம் ஜி ஆருக்கு இந்த வெற்றிகள் அவ்வளவு எளிதாகக் கிடைக்கவில்லை. அவர் சினிமாவில் 1930 களிலேயே அறிமுகமாகிவிட்டாலும் 50 களின் தொடக்கத்தில்தான் அவரால் ஒரு கதாநாயகனாக் நிலைபெற முடிந்தது. அதுவரை துண்டு துக்கடா வேடத்தில்தான் நடித்து வந்தார்.
அதே போல நாடக உலகிலும் அவர் பல இன்னல்களை சந்தித்துள்ளார். எம்ஜிஆர் ஒன்றரை வயது கைக்குழந்தையாக இருந்தபோதே அவரது தந்தை கோபாலமேனன் இலங்கையில் இறந்து விடுகிறார். அவரது மரணத்திற்குப் பிறகு அந்தக் குடும்பம் மிகக் கடுமையான பொருளாதார நெருக்கடிகளை சந்தித்து, கேரளாவுக்கு குடிபெயர்ந்தது. அதன் பின்னர் அங்கும் இருக்க முடியாமல் தமிழ்நாட்டுக்கு வந்துவிட்டனர்.
குடும்பத்தின் பொருளாதார சூழல் காரணமாக சிறு வயதிலேயே எம் ஜி ஆர் நாடகக்குழுவில் சேர்த்துவிடப்பட்டார். அங்கு அவர் நல்லதங்காளின் ஏழாவது குழந்தையாக நடித்தார். அப்போது அவர் நன்றாக அழவேண்டும் என்பதற்காக அவருக்கு பயிற்சியளித்த காளி என் ரத்தினம், அவரை உண்மையாக பிரம்பால் அடிப்பாராம். வலி தாங்க முடியாமல் அழுவாராம் எம் ஜி ஆர். அதைப் போலவே நாடகத்திலும் அழுது அனைவரின் கைத்தட்டல்களையும் பெறுவாராம்.
நாடகம் முடிந்ததும் காளி என்.ரத்னம் ‘நீ சரியா நடிக்கலங்குறதுக்காகதான்டா உன்னை அடிச்சேன். இப்ப பாரு மக்கள் எல்லாம் உன்னைப் பாராட்டுறாங்க … இப்படி எல்லாம் கஷ்டப்பட்டா தான்டா பெரிய ஆளா ஆக முடியும்’னு சமாதானம் சொன்னாராம். அதைக் கேட்டதும் தன் நல்லதுக்காகதான் இப்படி செய்தார் என்பதை புரிந்துகொண்டு அதன் பின்னர் சிறப்பாக நடிக்க ஆரம்பித்தாராம்.