CINEMA
இரட்டை வேடங்கள் : 17 படங்கள் நடித்த MGR.. 21 படங்கள் நடித்த சிவாஜி.. அதிகம் ஜெயித்தது யார் தெரியுமா..?
தமிழ் சினிமா காலம் மாற மாற பல தொழில்நுட்பங்களை தனதாக்கிக் கொள்ளும். ஒரு புதிய தொழில்நுட்பம் வருகிறது என்றாலே அது முதலில் சினிமாவில் தன் எதிரொளிக்கும். இரட்டை குழந்தைகள் பிறப்பது என்பதே இங்கு அதிசயமாக பார்த்துக் கொண்டிருந்த காலத்தில், சினிமாவிலும் அதனை உட்புகுத்தி, ஒரே ஃபிரேமில் ஒரே நடிகர் இரண்டு மாறுபட்ட கெட்டப் மற்றும் குணாதிசயங்களில் நடிக்கும் படியான புதிய தொழில்நுட்பத்தை வெளிப்படுத்தியது தமிழ் சினிமா. இதற்கு எம்.ஜி.ஆர் மற்றும் சிவாஜி மட்டும் விதிவிலக்கா என்ன? இவர்கள் இருவரும் எத்தனை இரட்டை வேட கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்? அப்படி நடித்த படங்களில் யாருடைய படங்கள் வெற்றி பெறுகிறது என்பதை விரிவாகப் பார்க்கலாம்..
எம்.ஜி.ஆர் முதன் முதலில் இரட்டை வேடத்தில் நடித்த படம் என்றால் அது நாடோடி மன்னன். ஒரே ஆளாக அவர் திரையில் தோன்றினாலே அதனை கொண்டாடிய ரசிகர்கள், இரட்டையாக தோன்றினால் விடுவார்களா என்ன? அசந்துப் போயி பார்த்தனர். ராஜா தேசிங்கு, கலையரசி, அரசிளங்குமரி, ஆசைமுகம், எங்க வீட்டுப்பிள்ளை, குடியிருந்த கோயில், மாட்டுக்கார வேலன், அடிமைப்பெண், நீரும் நெருப்பும், நாளை நமதே, நேற்று இன்று நாளை, சிரித்து வாழ வேண்டும், உலகம் சுற்றும் வாலிபன், ஊருக்கு உழைப்பவன், நினைத்ததை முடிப்பவன், பட்டிக்காட்டு பொன்னையா என மொத்தம் 17 படங்களில் எம்.ஜி.ஆர் இரட்டை வேடங்களில் நடித்து அசத்தியுள்ளார்.
இப்படி இரட்டை வேடங்களில் நடித்திருந்தாலும், அதிலும் ஒரு சில படங்கள் மட்டும் தான் வெற்றி பெற்றது. முதன்முதலாக இரட்டை வேடத்தில் அவர் நடித்த நாடோடி மன்னன் படம் 18 லட்சம் ரூபாய் பட்ஜெட்டில் உருவான இப்படம், 1958-ம் ஆண்டு வெளியாகி சுமார் 100 ஓடி புதிய சாதனையை படைத்தது. இதன் மூலம் 1 கோடி ரூபாய் வசூலித்து, எம்.ஜி.ஆரின் மதுரை வீரன் படத்தின் வசூலை முறியடித்தது.
அதேப் போல, எங்கவீட்டுப் பிள்ளை முதன் முதலில் 7 தியேட்டர்களில் வெள்ளி விழா கண்ட திரைப்படம். திருச்சியில் மட்டும் 236 நாட்கள் ஓடி சாதனைப் படைத்தது இப்படம். இதேப் போல, குடியிருந்த கோயில், மாட்டுக்கார வேலன், அடிமைப்பெண், நேற்று இன்று நாளை, சிரித்து வாழ வேண்டும், நினைத்ததை முடிப்பவன் உள்ளிட்ட படங்கள் 100 நாட்களுக்கு மேல் ஓடி சாதனை படைத்தன. மிச்சப் படங்கள் சுமாராகத் தான் ஓடின.
அடுத்தது சிவாஜிக்கு வருவோம். ஒரு சிவாஜி நடித்தாலே அவரை நடிப்பு சக்ரவர்த்தி என்போம். இரண்டாக அவர் திரையில் தோன்றினால்? எம்.ஜி.ஆரைக் காட்டிலும் அதிகம் இரட்டை வேடப் படங்களில் நடித்தது என்றால் அது சிவாஜி தான். உத்தமபுத்திரன், அன்னையின் ஆணை, சரஸ்வதி சபதம், எங்க ஊர் ராஜா, கௌரவம், எங்கள் தங்க ராஜா, சிவகாமியின் செல்வன், என் மகன், மனிதனும் தெய்வமாகலாம், பாட்டும் பரதமும், என்னைப் போல் ஒருவன், புண்ணிய பூமி, பட்டாக்கத்தி பைரவன், எமனுக்கு எமன், விஸ்வரூபம், மாடிவீட்டு ஏழை, சங்கிலி, தியாகி, சந்திப்பு, வெள்ளை ரோஜா, ரத்த பாசம் என மொத்தம் 21 படங்கள். கமர்ஷியல், ஃபேமிலி செண்டிமெண்ட், ஆக்சன் என அனைத்தையும் கலந்து படங்கள் நடித்து வந்தார் சிவாஜி.
இவற்றில் உத்தமபுத்திரன், சரஸ்வதி சபதம், கௌரவம், எங்கள் தங்க ராஜா, என் மகன், விஸ்வரூபம், சந்திப்பு, வெள்ளை ரோஜா ஆகிய 8 படங்கள் மட்டும் தான் 100 நாள்களைக் கடந்து ஓடியது. இவர்கள் இருவரில் 17 இரட்டைப் படங்களை நடித்த எம்.ஜி.ஆர் 9 படங்களை வெற்றிப் படங்களாக்கினார். ஆனால் சிவாஜி 21 இரட்டை வேட படங்களில் நடித்தும் 8 படங்களில் தான் வெற்றி பெற்றார். இதனால் இந்த போட்டியில் எம்.ஜி.ஆர் தான் வெற்றியடைந்துள்ளார்.