விம்பிள்டன் 2026 டென்னிஸ் தொடரின் இரண்டாவது சுற்றில் மெக்கார்ட்னி கெஸ்லரை வீழ்த்தி வெற்றி பெற்ற பிறகு செய்தியாளர்களிடம் பேசிய உலகின் முன்னணி வீராங்கனையான அரினா சபலென்கா, விம்பிள்டன் மைதானத்திற்குள் செல்லப்பிராணிகளை அனுமதிக்க வேண்டும் என்று உருக்கமாக வேண்டுகோள் விடுத்துள்ளார். விம்பிள்டன் தொடரின் நீண்டகால விதியாக இருக்கும் ‘செல்லப்பிராணிகளுக்கான தடை’ குறித்து தனது அதிருப்தியை வெளிப்படுத்திய இந்த பெலாரஷ்ய நட்சத்திரம், தனது செல்ல நாய் “ஆஷ்” ஐ மிகவும் மிஸ் செய்வதாகவும், எதிர்காலத்தில் இந்த விதியில் மாற்றம் கொண்டு வரப்படும் என்று நம்புவதாகவும் தெரிவித்துள்ளார்.
“செல்லப்பிராணிகள் நன்கு பயிற்சி பெற்றவை, வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த கட்டிடத்திற்குள் அவை எந்த சேதத்தையும் ஏற்படுத்தாது” என்று சபலென்கா வாதிட்டார். மேலும், பிரெஞ்சு ஓபன் (ரோலண்ட் கரோஸ்) போன்ற பிற முக்கிய தொடர்களில் மார்த்தா கோஸ்ட்யுக், அனஸ்தேசியா பொடாபோவா உள்ளிட்ட சக வீராங்கனைகள் தங்களது செல்லப்பிராணிகளை அழைத்து வர அனுமதிக்கப்பட்டதை சுட்டிக்காட்டிய அவர், விம்பிள்டனின் இந்த கடுமையான கொள்கையால் தனது ‘காவலியர் கிங் சார்லஸ் ஸ்பானியல்’ ரக நாயான ஆஷ்-ஐ வீட்டில் தனியாக விட்டுவர நேரிட்டதாக வருத்தத்துடன் பகிர்ந்து கொண்டார்.
தன்னுடன் எப்போதும் ஒட்டிக்கொண்டிருக்கும் ஆஷ்-ஐ தனியாக தவிக்க விடுவது மனதிற்கு வேதனை அளிப்பதாகக் கூறிய சபலென்கா, அதனுடன் பூங்காவில் உலாவுவதும், நேரம் செலவிடுவதும் தனக்கு ஒரு தியானம் போல மனஅமைதியைத் தரும் என்று நெகிழ்ச்சியடைந்தார். இறுதியாக, போட்டி அமைப்பாளர்களை நோக்கி நேரடியாகப் பேசிய சபலென்கா, “விம்பிள்டன், தயவுசெய்து நான் உங்களிடம் கெஞ்சிக் கேட்டுக்கொள்கிறேன், நாய்களை உள்ளே அனுமதியுங்கள்!” என நகைச்சுவையும் உருக்கமும் கலந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
