உத்தரப் பிரதேச மாநிலத் தலைநகர் லக்னோவின் அலிகஞ்ச் பகுதியில் உள்ள ஒரு தனியார் பயிற்சி மையத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கி 14 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். கட்டிடத்தில் தீ மிக வேகமாகப் பரவியதால், அங்கிருந்த மாணவர்கள் அலறியடித்தபடி ஓடியுள்ளனர். இந்த கோரப்பிடியில் இருந்து எப்படியாவது தப்பிக்க முயன்ற சில மாணவர்கள், வேறு வழியின்றி கட்டிடத்தின் மேல் தளங்களில் இருந்து கீழே குதித்த காட்சிகள் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தீ விபத்து குறித்து தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர், கட்டிடத்திற்குள் சிக்கியிருந்த 12 பேரை பத்திரமாக மீட்டுள்ளனர். விபத்தில் காயமடைந்தவர்கள் உடனடியாக சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். எனினும், கட்டிடத்தின் உள்ளே இன்னும் 20-க்கும் மேற்பட்ட மாணவர்கள் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுவதால், மீட்புப் பணிகள் தொடர்ந்து தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
