சேலம் மாநகரப் பகுதிகளில் சமீப நாட்களாக இருசக்கர வாகனத் திருட்டுச் சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில், சூரமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஜாகிர் ரெட்டிப்பட்டியில் ஒரு அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது. பொறியாளர் சந்தோஷ் என்பவர் தனது பைக்கை வீட்டின் வெளியே நிறுத்தியிருந்த நிலையில், மறுநாள் காலை அது காணாமல் போயிருந்தது.
சந்தோஷ் அளித்த புகாரின் பேரில், காவல்துறையினர் அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளைப் பெற்று ஆய்வு செய்தனர். அந்த காட்சிகளில், நள்ளிரவில் முகமூடி அணிந்த இரண்டு இளைஞர்கள் சந்தோஷின் இருசக்கர வாகனத்தைத் திருடிச் சென்றது பதிவாகி இருந்தது. அந்தக் காணொளியில், இளைஞர்கள் முகமூடி அணிந்துகொண்டு சாலையில் நடந்து வந்து, நிறுத்தப்பட்டிருந்த பைக்குகளை எடுக்க முயற்சிக்கும் காட்சிகள் பதிவாகியுள்ளன.
இந்தச் சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், சிசிடிவி காட்சிகளில் பதிவான கொள்ளையர்களின் உருவங்களை வைத்து, அவர்கள் யார், எங்கிருந்து வந்தனர், அவர்களுக்குத் தொடர்புள்ள நபர்கள் யார் என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
