CINEMA
ஜெயலலிதாவுக்காக ரஜினியைக் கடுமையாக திட்டிய மனோரமா.. இதனால் ஏற்பட்ட விளைவு..
இந்திய சினிமாவில் 1500 படங்களுக்கு மேல் நடித்த ஒரே நடிகர் என்ற சாதனையைப் படைத்தவர் ஆச்சி மனோரமா. 50 ஆண்டுகளுக்கும் மேலான அவரின் திரை வாழ்க்கையில் அவருடன் இணைந்து நடிக்காத நடிகர்களே இல்லை என்று சொல்லிவிடலாம்.
தமிழகத்தின் ஐந்து முதல்வர்களோடு இணைந்து நடித்திருந்தாலும் மனோரமா தன்னை எந்த அரசியல் கட்சியுடனும் இணைத்துக் கொள்ளவில்லை. எல்லோருக்கும் பொதுவானவராகவே தன்னைக் காட்டிக்கொண்டார். ஆனால் ஒரே ஒரு முறை மட்டும் மனோரமா, அரசியல் காரணமாக ஒரு நடிகரை தாக்கிப் பேசியுள்ளார். அதுவும் யாரைத் தெரியுமா? சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தைதான்.
மனோரமா தன்னுடைய இடம் ஒன்றில் பள்ளிக்கூடம் இயங்க வாடகைக்கு விட்டுள்ளார். ஒரு குறிப்பிட்ட காலத்துக்குப் பின்னர் அந்த பள்ளிக்கூடத்தை காலி பண்ண சொல்லியுள்ளார். ஆனால் அந்த நிர்வாகமோ அதற்கு மறுக்க பிரச்சனை நீண்டுள்ளது. இந்த பிரச்சனையைத் தீர்க்க அப்போது முதலமைச்சராக இருந்த தன்னுடைய தோழியான ஜெயலலிதாவின் உதவியை நாடியுள்ளார்.
ஜெயலலிதாவும் அவர் பிரச்சனையைத் தீர்த்து வைத்துள்ளார். அதற்கு நன்றிக்கடனாக சில அரசியல் மேடைகளில் கலந்துகொண்டுள்ளார். அப்போது ரஜினிகாந்த் ஜெயலலிதாவுக்கு எதிராக கருத்துகளை சொல்லி திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்திருந்தார்.
அதனால் தான் பேசும் மேடைகளில் ரஜினியைக் கடுமையாக தாக்கி பேசினார் மனோரமா. இது திரையுலகினருக்கே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் அந்த தேர்தலில் திமுக கூட்டணியே வெற்றி பெற்றுள்ளது. இதனால் மனோரமாவை தன்னுடைய படங்களில் புக் செய்ய தயாரிப்பாளர்கள் தயங்கியுள்ளனர்.
இதனால் மனோரமாவின் வீட்டுக்கு நேரே சென்ற ரஜினி “அவருக்கும் எனக்கும் எந்த பிரச்சனையும் இல்லை. அவர் எவ்வளவு திட்டினாலும் நான் வாங்கிக் கொள்வேன்” என்று கூறி பிரச்சனையை முடிவுக்குக் கொண்டுவந்துள்ளார். மேலும் தன்னுடைய அருணாச்சலம் படத்திலும் அவருக்கு ஒரு முக்கியமான வேடத்தைக் கொடுத்துள்ளார். அதன் பின்னர் மனோரமாவுக்கு வாய்ப்புகள் மீண்டும் வர ஆரம்பித்துள்ளன.