திமுக இளைஞரணி நிர்வாகிகள் கூட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், பாஜகவின் தொடர் வெற்றிக்கு காங்கிரஸ்தான் காரணம் என்றும், பதவிக்காக ஓடிப்போன மற்றும் குறைந்தபட்ச நன்றியோ நாகரிகமோ இல்லாத காங்கிரசை இனி எந்தக் காலத்திலும் நம்பப் போவதில்லை என்றும், அவர்களுக்குத் தமிழ்நாட்டு மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள் என்றும் கடுமையாகச் சாடியிருந்தார். உதயநிதி ஸ்டாலினின் இந்த விமர்சனத்திற்கு காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் செய்தியாளர்கள் சந்திப்பில் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்களைச் சந்தித்த மாணிக்கம் தாகூர், கடந்த மே 4-ஆம் தேதி தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றுக் கொண்டிருந்தபோது திமுகவும் அதிமுகவும் இணைந்து ஆட்சி அமைக்கத் திட்டமிட்டதாகக் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். அப்போது பாஜகவின் முக்கியத் தலைவர் ஒருவர் இரு கட்சிகளுக்கும் இடையே ‘கனெக்டிங் கால்’ மூலம் பேசியதாகவும், எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சராக்குவதற்கு உதயநிதி ஸ்டாலின் சம்மதம் தெரிவித்து துள்ளிக்குதித்ததாகவும், ஆளுநரின் மறைமுக ஒத்துழைப்புடன் பாஜகவுக்குச் சாதகமாக இந்த முடிவு எடுக்கப்படவிருந்ததாகவும் அவர் விவரித்துள்ளார்.
திமுக மற்றும் அதிமுகவின் இந்தக் கொள்கையற்ற திட்டத்தை காங்கிரஸ் கட்சி உடைத்தெறிந்ததால்தான், அவர்கள் தங்கள் மீது காழ்ப்புணர்ச்சி கொண்டுள்ளதாக மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார். மேலும், இந்த உண்மை தெரிந்ததால்தான் தமிழக வெற்றிக் கழகத்திற்கு (தவெக) காங்கிரஸ் ஆதரவு அளித்ததாகவும், திமுக இளைஞரணி கூட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் அளந்து பேசியிருக்க வேண்டும் என்றும், எதிர்காலத்தில் திமுகவும் அதிமுகவும் பாஜகவுடன் கூட்டணி அமைப்பது உறுதி என்றும் அவர் காரசாரமாகக் குறிப்பிட்டுள்ளார்.
