அலுவலகப் பணிகள் முடிந்த பிறகு, ஒரு இளம் பெண் தனது நண்பர்களுடன் சேர்ந்து அலுவலகத்திற்கு வெளியே அமர்ந்து ஜூஸ் அருந்திக் கொண்டிருந்தார். அப்போது அருகில் அமர்ந்திருந்த நடுத்தர வயது நபர் ஒருவர், அந்தப் பெண்ணைப் பார்த்து மிகவும் அநாகரீகமான முறையில் சைகை செய்து தொல்லை கொடுக்கத் தொடங்கியுள்ளார். ஆரம்பத்தில் அந்தப் பெண் அதைக் கவனிக்காதது போல இருந்துள்ளார். ஆனால், அந்த நபரின் செயல் எல்லை மீறியதால், சாமர்த்தியமாகத் தனது அலைபேசியில் அந்த நபர் செய்த அசிங்கமான சைகைகளை ரகசியமாக வீடியோ எடுத்துள்ளார்.
பின்னர் அந்த வீடியோவைத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த அந்தப் பெண், தனது வேதனையை வெளிப்படுத்தியுள்ளார். “அந்தச் சமயத்தில் பயம் அல்லது தயக்கம் காரணமாக என்னால் உடனடியாக அந்த நபரை எதிர்த்துப் பேசவோ அல்லது தட்டிக்கேட்கவோ முடியவில்லை. ஆனால், இப்போது அதை நினைத்தால் எனக்கு மிகப்பெரிய வருத்தமாகவும், குற்ற உணர்ச்சியாகவும் இருக்கிறது” என்று பதிவிட்டுள்ளார்.
மேலும், இது போன்ற இக்கட்டான சூழ்நிலைகளில் பெண்கள் அமைதியாக இருக்கக் கூடாது என்றும், அந்த இடத்திலேயே உடனடியாகக் குரல் எழுப்ப வேண்டியது அவசியம் என்றும் அவர் மற்ற பெண்களுக்கு அறிவுறுத்தியுள்ளார். குற்றவாளிகள் பயமின்றி இது போன்ற செயல்களில் ஈடுபடுவதற்குப் பெண்களின் மௌனமே காரணமாகிவிடுகிறது என்பதை உணர்த்தும் விதமாக இந்தப் பதிவு சமூக வலைதளங்களில் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
