தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் அருகே உள்ள போச்சாரம் பகுதியில், தனக்கு நிச்சயம் செய்யப்பட்ட பெண்ணின் திருமணத்தை அவரது குடும்பத்தினர் நிறுத்தியதால், ஆத்திரமடைந்த வாலிபர் ஒருவர் பெண்ணின் உடலில் தனது எச்.ஐ.வி (HIV) பாதிப்புள்ள ரத்தத்தைச் செலுத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்தப் பெண்ணின் தந்தை அளித்த புகாரின் அடிப்படையில், போச்சாரம் ஐ.டி காரிடார் போலீசார் 24 வயதான மனோகர் என்ற வாலிபரைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்தச் சம்பவத்தின் பின்னணி குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: மனோகருக்கும் அவரது உறவினர் பெண்ணுக்கும் திருமணம் செய்ய இரு வீட்டாரும் முதலில் முடிவு செய்திருந்தனர். ஆனால், மனோகரின் பெற்றோர் எச்.ஐ.வி பாதிப்பால் உயிரிழந்ததால், சந்தேகம் அடைந்த பெண்ணின் தந்தை திருமணத்திற்கு முன்பு மனோகரை மருத்துவப் பரிசோதனை செய்துகொள்ளுமாறு வலியுறுத்தினார். அந்தப் பரிசோதனையில் மனோகருக்கும் எச்.ஐ.வி தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதால், அதிர்ச்சியடைந்த பெண்ணின் குடும்பத்தினர் இந்தத் திருமணத்தை உடனடியாக ரத்து செய்தனர்.
திருமணம் நின்றதால் ஆத்திரமடைந்த மனோகர், கடந்த மார்ச் 11-ம் தேதி அப்பெண்ணின் வீட்டிற்குச் சென்றுள்ளார். அங்கு யாரும் இல்லாத நேரத்தில், தன்னிடம் இருந்த ஊசி மூலம் தனது ரத்தத்தை எடுத்து அப்பெண்ணின் உடலில் வலுக்கட்டாயமாகச் செலுத்தியுள்ளார். இதில் நிலைகுலைந்த அந்தப் பெண் பெற்றோரிடம் நடந்ததைக் கூறவே, அவர் உடனடியாக காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தற்பொழுது அந்தப் பெண்ணிற்குத் தீவிர சிகிச்சையும், வைரஸ் பரவாமல் தடுப்பதற்கான மருத்துவ ஆலோசனைகளும் வழங்கப்பட்டு வருகின்றன. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
