தென்காசி அருகே தனியார் பள்ளி ஒன்றில் பணியாற்றி வரும் இளம்பெண் ஒருவரை, சுரேஷ் என்ற இளைஞர் ஒருதலைக் காதலித்து வந்துள்ளார். அந்தப் பெண் தனது காதலைத் தொடர்ந்து நிராகரித்ததால் ஆத்திரமடைந்த சுரேஷ், பள்ளி வாசலில் வைத்து அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
திடீரென தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் அந்தப் பெண்ணின் கழுத்து மற்றும் உடலில் பல இடங்களில் சரமாரியாகக் குத்தியுள்ளார். ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்த அந்தப் பெண்ணை அங்கிருந்தவர்கள் மீட்டு, திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவருக்கு அங்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
விசாரணையில், பழக்கடையில் பணிபுரியும் சுரேஷ், அந்தப் பெண்ணுடன் பழகி வந்துள்ளதும், திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தி அவருக்குத் தொடர்ந்து ‘லவ் டார்ச்சர்’ கொடுத்துள்ளதும் தெரியவந்துள்ளது. அந்தப் பெண் சுரேஷுடன் பேசுவதையே தவிர்த்ததால், ஆத்திரமடைந்த சுரேஷ் பழம் வெட்டும் கத்தியைப் பயன்படுத்திப் பழிவாங்கியுள்ளான்.
இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த இலத்தூர் காவல்துறையினர், சுரேஷைக் கைது செய்து சிறையில் அடைத்தனர். பட்டப்பகலில் பள்ளி வாசலிலேயே நடைபெற்ற இந்தத் துணிகரமான கொலை முயற்சிச் சம்பவம் தென்காசி பகுதி மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
