“இந்த சீட்டை காலி பண்ணுங்க…” காலை இழந்த மாற்றுத்திறனாளி முதியவருடன் தகராறு…. மனசாட்சி இல்லாமல் வாலிபர் செய்த கொடூரம்… பகீர் பின்னணி…!!

By Devi Ramu on ஆவணி 21, 2026

Spread the love

மும்பையில் தாதரிலிருந்து போரிவலி நோக்கிச் சென்ற புறநகர் மின்சார ரயிலில், மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு பெட்டியில் பயணம் செய்த கேஜேடன் டெனிஸ் பிரைஸ் (64) என்ற மாற்றுத்திறனாளி முதியவர், ரயிலில் இருந்து தள்ளிவிடப்பட்டு பரிதாபமாக கொல்லப்பட்டார். மாற்றுத்திறனாளிகளுக்கான இருக்கையில் அமர்ந்திருந்த அம்ஜத் சாஃபுதீன் ஷேக் (48) என்பவரிடம், அந்த இருக்கையைக் காலி செய்யுமாறு பிரைஸ் கோரியுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில், ஆத்திரமடைந்த அம்ஜத் ஷேக், ஒரு காலை இழந்த நிலையிலிருந்த பிரைஸை ரயிலில் இருந்து வெளியே தள்ளியதாகக் கூறப்படுகிறது.

மாஹிம் மற்றும் பாந்த்ரா நிலையங்களுக்கு இடையே ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்த பிரைஸ், தலையில் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம் தொடர்பாக ரயில்வே காவல் துறையினர் அம்ஜத் சாஃபுதீன் ஷேக்கை உடனடியாகக் கைது செய்து, பாரதிய நியாய சன்ஹிதா பிரிவு 103-இன் கீழ் கொலை வழக்குப் பதிவு செய்துள்ளனர். விசாரணையின் போது, தான் காகத்தை விரட்ட முயன்றபோது தற்செயலாக கை பட்டுவிட்டது என மாற்றிப் பேசிய போதிலும், சாட்சிகளின் வாக்குமூலத்தின் அடிப்படையில் காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மாற்றுத்திறனாளிகளுக்கான பெட்டிகளில் பொது மக்கள் அத்துமீறுவதைத் தடுக்க ரயில்வே நிர்வாகம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.