டெல்லி துவாரகாவில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில், ஐவிஎஃப் (IVF) சிகிச்சை மூலம் இரட்டைக் குழந்தைகளைப் பெற்றெடுத்த தம்பதியினருக்கு அதிர்ச்சிகரமான உண்மை ஒன்று தெரியவந்துள்ளது. தங்களது இரண்டு குழந்தைகளின் முக அமைப்பும், தங்களுடைய முக அமைப்பிலிருந்து முற்றிலும் மாறுபட்டிருப்பதை கண்டு சந்தேகமடைந்த தம்பதியினர், குழந்தைகளுக்கு டிஎன்ஏ (DNA) பரிசோதனை செய்துள்ளனர். அந்தப் பரிசோதனையின் முடிவில், குழந்தைகள் இருவருமே தங்களுடைய இரத்த வாரிசுகள் இல்லை என்ற பகீர் உண்மை வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
மருத்துவமனையின் அலட்சியத்தால் தங்களது குழந்தைகள் மாற்றப்பட்டிருப்பதாகக் குற்றம் சாட்டியுள்ள அந்தத் தம்பதியினர், நீதிமன்ற உத்தரவின் பேரில் தற்போது காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். கடந்த 5 மாதங்களாக அந்தக் குழந்தைகளைத் தங்களின் சொந்தக் குழந்தைகளாகவே பாவித்து வளர்த்து வந்த நிலையில், இந்த உண்மை அவர்களை நிலைகுலையச் செய்துள்ளது. தற்போது, தங்களுக்கு நீதி கிடைக்க வேண்டி அவர்கள் சமூக வலைத்தளங்கள் வாயிலாகப் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.
அவர்கள் வெளியிட்டுள்ள உருக்கமான வீடியோவில், கைகூப்பி அழுதபடி ஒரு முக்கிய வேண்டுகோளை விடுத்துள்ளனர்: “2025-ஆம் ஆண்டில் இந்தத் குறிப்பிட்ட தனியார் மருத்துவமனையில் ஐவிஎஃப் (IVF) முறையில் குழந்தை பெற்றெடுத்த பெற்றோர்கள் அனைவரும், தயவுசெய்து தங்களது குழந்தைகளுக்கு உடனடியாக டிஎன்ஏ பரிசோதனை செய்து பார்த்துக் கொள்ளுங்கள். உங்களது உண்மையான குழந்தை எங்களிடமும், எங்களது குழந்தை உங்களிடமும் இருக்க வாய்ப்புள்ளது” எனப் பெற்றோர் தங்களது குமுறலை வெளிப்படுத்தியுள்ளனர்.
