ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு என தமிழக காங்கிரஸ் தலைவர்கள் சிலர் தங்களின் கூட்டணி தலைமையான திமுகவுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தி வரும் நிலையில், தமிழக காங்கிரஸில் மகளிருக்கு மரியாதை இல்லை என்றொரு குண்டைத் தூக்கி வீசி இருக்கிறார் தமிழக மகளிர் காங்கிரஸ் தலைவர் ஹசீனா சையத்.
தமிழ்நாடு காங்கிரஸில் பெண்களுக்கு மரியாதை இல்லை என மகிளா காங்கிரஸ் தலைவர் ஹசீனா சையத் அடுத்த கலக்கத்தை தொடங்கியுள்ளார். தனியார் நாளிதழுக்கு இது தொடர்பாக பேட்டியளித்த அவர், வாரிசு அரசியலை ஓரம் கட்டி விட்டு உழைக்கும் பெண்களுக்கு தொகுதிகளை ஒதுக்கீடு செய்ய தேசிய தலைமையை வலியுறுத்துவேன் எனவும் கூறியுள்ளார். நடிகை குஷ்பூ மற்றும் விஜயதாரணி ஆகியோரும் இதே குற்றச்சாட்டை முன்வைத்து கட்சியிலிருந்து விலகி பாஜகவில் இணைந்தது குறிப்பிடத்தக்கது.
