“5 வருஷத்துல 4 கட்சி மாறிய சீனியர் டாக்டர் சரவணன்”…. பதவி கேட்டு புஸ்ஸி ஆனந்துக்கு ‘செக்’…. தவெகவில் திடீர் பரபரப்பு…..!

By Nanthini on ஆடி 22, 2026

Spread the love

சமீபத்தில் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த அதிமுக முன்னாள் நிர்வாகியும் மருத்துவருமான சரவணன், தற்போது அக்கட்சியின் தலைமையிடம் மாநில அளவிலான உயரிய பொறுப்பைக் கேட்டு அழுத்தம் கொடுத்து வருவது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளில் மட்டும் திமுக, பாஜக, அதிமுக மற்றும் தற்போது தவெக என நான்கு கட்சிகளுக்கு மாறிய வரலாற்றுக்கு சொந்தக்காரரான இவர், எந்தக் கட்சிக்குச் சென்றாலும் அங்குள்ள மூத்த நிர்வாகிகளுடன் மோதலில் ஈடுபடுவதை வாடிக்கையாகக் கொண்டவர் என மதுரை அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.

முன்னதாக, திமுகவில் இருந்தபோது மாவட்டச் செயலாளர்களான தளபதி மற்றும் மூர்த்தி ஆகியோருடனும், அதிமுகவில் இருந்தபோது செல்லூர் ராஜூ, ராஜன் செல்லப்பா, ஆர்.பி.உதயகுமார் போன்ற மூத்த தலைவர்களுடனும் இவருக்குத் தொடர் மோதல் போக்கு நீடித்தது. இதனால் அங்கெல்லாம் இவரால் மாவட்டச் செயலாளர் பதவியைப் பெற முடியாமல் போனது. இந்நிலையில்தான், மதுரை மாவட்ட தவெக நிர்வாகிகளைச் கலந்தாலோசிக்காமல், நேரடியாகத் கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்தைச் சந்தித்து தவெகவில் தன்னை இணைத்துக் கொண்டார்.

   

சரவணனின் இந்த அதிரடி நகர்வு மதுரை மாவட்ட தவெக மூத்த நிர்வாகிகளிடையே பெரும் கொந்தளிப்பையும் அதிருப்தியையும் உருவாக்கியுள்ளது. குறிப்பாக, தங்களது பதவிகளுக்கு இவரால் ஆபத்து வந்துவிடுமோ என்ற அச்சத்தில் உள்ள மதுரை மாவட்ட நிர்வாகிகள், இவரைப் முற்றிலும் புறக்கணித்து ஒதுக்கியே வைக்கின்றனர். கட்சி நிகழ்ச்சிகளுக்கு இவருக்கு முறைப்படி அழைப்பு விடுப்பதில்லை என்றும், கூட்டங்களுக்கு வந்தாலும் தகுந்த மரியாதை அளிப்பதில்லை என்றும் கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சலுக்கு ஆளான சரவணன், இது குறித்து உள்ளூர் நிர்வாகிகளிடமே நேரடியாகக் கேள்வி எழுப்பியுள்ளார்.

   

அதற்கு உள்ளூர் நிர்வாகிகள், “கட்சியில் மாவட்டச் செயலாளர் போன்ற பொறுப்பில் இருப்பவர்களுக்கே மரியாதை கிடைக்கும்; எனவே நீங்களும் தலைமையிடம் சென்று பதவியைப் பெற்றுக்கொள்ளுங்கள், மரியாதை தானாக வரும்” என்று பதிலடி கொடுத்துள்ளனர். இதையடுத்து, மீண்டும் புஸ்ஸி ஆனந்தை நேரில் சந்தித்த சரவணன், தனக்குக் கண்டிப்பாக மாநில அளவிலான பொறுப்பு வழங்கப்பட வேண்டும் என நெருக்கடி கொடுத்துள்ளார். இருப்பினும், இவரது கோரிக்கையைக் கேட்டுக் கொண்ட புஸ்ஸி ஆனந்த், எந்தவித சாதகமான பதிலோ அல்லது சிக்னலோ கொடுக்காமல் அவரை அனுப்பி வைத்துள்ளதாகக் தகவல்கள் தெரிவிக்கின்றன.