CINEMA
என் முதல் பாட்ட இளையராஜா பாடப் போறாரா?.. புல்லரித்துப் போய் நின்ற சினேகனுக்கு கிடைத்த ஷாக்.. அப்போது அரவணைத்த ஒரு கை!
தமிழ் திரையுலகில் இதுவரை 700க்கும் மேற்பட்ட படங்களில் 2 ஆயிரத்து 500க்கும் அதிகமான பாடல்களை எழுதியவர் கவிஞர் சினேகன். நடிப்பின் மீதான ஆர்வம் காரணமாக உயர்திரு 420, ராஜராஜ சோழனின் போர்வாள், பூமி வீரன் என சில படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலமாக பட்டி, தொட்டி எல்லாம் பிரபலமான சினேகன்.
அதன் பின்னர் அந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய உலக நாயகன் கமல் ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டார். கவிஞர் சினேகன் பிரபல நடிகையான கன்னிகாவை திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமணத்திற்கு அரசியல் கட்சி தலைவர்கள், திரைப்பிரபலங்கள் என பலரும் வந்து வாழ்த்து கூறினர்.
பாடலாசிரியர் சினேகனுக்கு தமிழ் சினிமாவில் மிகவும் நெருங்கிய நண்பராக இருப்பவர் இயக்குனர் அமீர். அமீர் இயக்கும் எல்லா படங்களிலும் சினெகன் ஒரு பாடலாவது எழுதிவிடுவார். அந்த அளவுக்கு மௌனம் பேசியதே படத்தில் இருந்தே இருவரின் நட்பும் தொடர்ந்து வருகிறது.
இந்நிலையில் சினேகன் தான் எவ்வாறு இயக்குனர் அமீரை முதல் முதலாக ஒரு வித்தியாசமான சூழலில் சந்தித்தேன் என்பது பற்றி பேசியுள்ளார். அதில் “நான் வாய்ப்புக்காக அலைந்துகொண்டிருந்த போது இயக்குனர் பாலாவின் இரண்டாவது படமான நந்தாவில் ஒரு பாடல் எழுதும் வாய்ப்புக் கிடைத்தது. எழுதிக் கொடுத்தேன். அந்த பாடலை இளையராஜா பாடப்போவதாகவும் சொன்னார்கள். எனக்கோ புல்லரித்து விட்டது. ஒரு பாடலாசிரியரின் முதல் பாட்டுக்கு இதைவிட வேறு என்ன கௌரவம் கிடைத்துவிட முடியும்.
ஆசையாக பாலாவின் அலுவலகத்துக்கு ஒரு நாள் சென்றேன் பாடலைக் கேட்கலாம் என. அப்போது அந்த படத்தில் இணை இயக்குனராக பணியாற்றி வந்த அமீர், என்னை சாலையோர டீக்கடை ஒன்றுக்கு அழைத்து சென்று ‘நீங்கள் எழுதிய பாடல் மிகவும் நன்றாக இருந்தது. ஆனால் படத்தின் சூழலுக்கு அது பொருந்தாது என்பதால் அந்த பாடலை நீக்கிவிட்டோம்.” எனக் கூறினார். நான் கண்கலங்காத குறையாக நின்றேன். அப்போது அமீர் என்னை ஆறுதல் படுத்தும் விதமாக “நீங்கள் வருத்தப்படாதீர்கள். நான் என்றைக்கு இயக்குனர் ஆனாலும் என் படத்தில் நீங்கள் பாட்டு எழுதுவீர்கள் என்று கூறினார்.
இது சினிமாவில் எல்லோரும் சொல்வதுதான் என்று நினைத்துக்கொண்டேன். அடுத்த ஆண்டு ஒரு படத்துக்குப் பாடல் எழுதும் வாய்ப்பு வந்தது. இயக்குனரின் அலுவலகம் சென்றேன். அங்கே அமீர் சிரிப்போது என்னை வரவேற்றார். சொன்ன வாக்கைக் காப்பாற்றினார்” எனப் பேசியுள்ளார்.