இந்திய புராண மரபில் மறுபிறவி என்ற கான்செப்ட் மிகவும் ஆழமாக நம்பப்படுகிறது. நம்மில் பலரும் பேச்சுவாக்கில், “அடுத்த பிறவியிலாவது பணக்காரனா பிறக்கனும்” என்று கூறுவது உண்டு. மக்களிடையே கூட மறுபிறவி நம்பிக்கை பரவலாக உண்டு. ஆனால் நிஜமாகவே மறுபிறவி என்று ஒன்று உண்டா என்ற ஆராய்ச்சியில் அறிவியலாளர்கள் இறங்கியுள்ளார்கள். அவர்களுக்கு தீனி போடும் வகையில் அமைந்த ஒரு உண்மை சம்பவத்தை குறித்துதான் இப்போது நாம் பார்க்கப்போகிறோம்.
2013 ஆம் ஆண்டு அமெரிக்காவின் ஓஹியொ மாகாணத்தில் ஒரு ஆண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தையின் பெயர் லூக். அந்த குழந்தைக்கு இரண்டரை வயது ஆனபோது அவன் பாம் என்ற பெண்ணை குறித்து அதிகமாக பேசத்தொடங்கினான்.
லூக்கின் தாயாரான எரிகா, ஒரு நாள் “யார் அந்த பாம்?” என்று கேட்க அதற்கு இரண்டரை வயதான லூக், “நான்தான் பாம். முற்பிறவியில் நான் பாம் என்ற பெண்ணாக இருந்தேன். அந்த பெண் சிகாகோவில் ஒரு ஹோட்டலில் நடந்த தீ விபத்தில் இறந்துவிட்டாள்” என்று கூறினான். இதை கேட்டதும் எரிகாவுக்கு தலைக்கால் புரியவில்லை.
லூக்கிற்கு சிகாகோ என்ற நகரம் தெரிந்திருக்க வாய்ப்பே இல்லை. லூக் சொன்ன அந்த தீ விபத்து சம்பவத்தை குறித்து எரிகா கூகுளில் தேடினார். நிஜமாகவே சிகாகோவில் அமைந்திருந்த பாக்ஸன் ஹோட்டலில் 1993 ஆம் ஆண்டு தீ விபத்து ஏற்பட்டிருக்கிறது. அந்த தீ விபத்தில் 19 பேர் இறந்திருக்கிறார்கள். அதில் ஒருவர்தான் பமீலா ராபின்சன் என்ற பாம். அந்த பெண் தீ விபத்தில் இறந்தபோது அவருக்கு வயது 30. லூக்கின் தாயாரான எரிகாவிற்கு தூக்கிவாரிப்போட்டது. இவன் சொல்வதெல்லாம் உண்மைதானா? என்று குழம்பினாள். விஷயம் அமெரிக்கா முழுவதும் பரவ ஆரம்பித்தது.
அதன் பின் Ghost inside my child என்ற ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சிக்கு லூக்கை அழைத்துச்சென்றார் அவனது தாய் எரிகா. அந்த தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பல பெண்களின் புகைப்படங்கள் லூக்கிற்கு காட்டப்பட்டது. அதில் பாம்மின் புகைப்படமும் இருந்தது. லூக் சரியாக பாம்மின் புகைப்படத்தை எடுத்து, முற்பிறவியில் இந்த புகைப்படத்தை படமாக்கியது குறித்த அனுபவத்தையும் கூறினான்.
அதில் இருந்து பாம்மின் மறுபிறவிதான் லுக் என்று தீர்க்கமாக நம்பப்பட்டது. பாம்மிற்கு பிடித்த விஷயங்கள் எல்லாம் லூக்கிற்கும் பிடிக்கத் தொடங்கியது. அனைவரும் பாம்மின் மறுபிறவிதான் லூக் என்று உறுதியோடு நம்பத்தொடங்கினார்கள். இந்த பிரபலமான சம்பவம் விஞ்ஞானிகளை உலுக்கி எடுத்தது. மறுபிறவி குறித்த ஆராய்ச்சிகளும் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டது. ஆனாலும் இன்றுவரை இந்த மர்மத்தை அவர்களால் கண்டுபிடிக்கவே முடியவில்லை.