இனி கேஸ் சிலிண்டருக்கு அலைய வேண்டாம்…. இந்திய கப்பல்களுக்கு ஈரான் வழங்கிய ‘கிரீன் சிக்னல்’…. ஹார்முஸ் ஜலசந்தியில் இந்தியக் கொடி….!

By Nanthini on பங்குனி 12, 2026

Spread the love

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக, ஈரான் தனது ஹார்முஸ் ஜலசந்தியை மூடியதால், இந்தியாவுக்கான கச்சா எண்ணெய் மற்றும் கேஸ் விநியோகத்தில் பெரும் பாதிப்பு ஏற்பட்டது. சவுதி அரேபியா, கத்தார், ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட நாடுகளிலிருந்து இந்தியா இறக்குமதி செய்யும் எரிபொருட்களில் பெரும்பகுதி இந்த முக்கிய கடல் பாதை வழியாகவே வருகின்றன. இந்த திடீர் தடையால், இந்தியாவில் கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு மற்றும் எரிபொருள் விநியோகத்தில் பதற்றமான சூழல் நிலவியது.

இந்த இக்கட்டான சூழலில், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் மற்றும் ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அராச்சி ஆகியோருக்கு இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தை முக்கிய திருப்பத்தை ஏற்படுத்தியது. இதன் விளைவாக, இந்தியக் கொடியுடன் பயணிக்கும் கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தி வழியாகச் செல்ல ஈரான் அனுமதி அளித்துள்ளது. இந்த நல்லுறவின் வெளிப்பாடாக, ‘புஷ்பக்’ மற்றும் ‘பரிமல்’ ஆகிய இந்திய எண்ணெய் கப்பல்கள் ஏற்கனவே பாதுகாப்பாக இந்த ஜலசந்தியை கடந்துள்ளன.

   

இந்தியாவின் எல்பிஜி (LPG) தேவையில் சுமார் 60 சதவீதம் இறக்குமதி மூலமே பூர்த்தியாகிறது, இதில் 90 சதவீதத்திற்கும் அதிகமான விநியோகம் ஹார்முஸ் ஜலசந்தி வழியாகவே கிடைக்கிறது. தற்போது விதிக்கப்பட்ட தடையால் வீட்டு உபயோக மற்றும் வணிக ரீதியிலான கேஸ் சிலிண்டர் விநியோகம் பாதிக்கப்பட்டு, முன்பதிவு நாட்களும் அதிகரிக்கப்பட்டிருந்தன. ஈரான் அளித்துள்ள இந்த அனுமதியின் மூலம், எரிபொருள் விநியோகச் சங்கிலி மீண்டும் சீராகி, கேஸ் தட்டுப்பாட்டிற்கு விரைவில் தீர்வு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

   

அதேபோல், இந்தியாவுக்குத் தேவையான எல்என்ஜி (LNG) கேஸில் 50 சதவீதம் மத்திய கிழக்கு நாடுகளிலிருந்தே வருகிறது, குறிப்பாக கத்தார் மட்டும் இந்தியாவின் தேவைக்கு 40 சதவீத பங்களிப்பை வழங்குகிறது. இந்த கேஸ் மின் உற்பத்தி மற்றும் பல்வேறு தொழில்துறைகளுக்கு மிக அவசியமானதாகும். தற்போது இந்திய கப்பல்களுக்குக் கிடைத்துள்ள இந்த அனுமதி, நாட்டின் எரிசக்தி பாதுகாப்பை உறுதி செய்வதோடு, தொழிற்சாலைகள் மற்றும் அத்தியாவசிய சேவைகள் எவ்விதத் தடையுமின்றி இயங்கவும் வழிவகை செய்யும்.