சேலம் தாதகாப்பட்டி தாகூர் தெருவை சேர்ந்த கண்ணன் (37) என்பவருடைய மனைவியை ரதிதேவி (27). இவர்கள் இருவரும் காதலித்து வந்த நிலையில் பெற்றோர் சமூகத்துடன் திருமணம் செய்து கொண்டனர். தற்போது இந்த தம்பதியினருக்கு 11 வயதில் சுபஸ்ரீ என்ற மகளும் 7 வயதில் ஸ்ரீகரன் என்ற மகனும் உள்ளனர். கண்ணன் பழைய வியாபாரம் செய்து வரும் நிலையில் ரதிதேவியின் நடத்தையில் அவருக்கு சந்தேகம் வந்துள்ளது. இதனால் கணவன் மனைவியிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்ட நிலையில் மன உளைச்சல் அடைந்த ரதிதேவி கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு கணவருடன் கோபித்துக் கொண்டு தன் பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார்.
பிறகு கண்ணன் அடிக்கடி மாமனார் வீட்டுக்குச் சென்று மனைவியை சமாதானம் செய்து வந்தார். இருந்தாலும் ரதிதேவி சமாதானம் அடையவில்லை. இனிமேல் சந்தேகப்பட மாட்டேன் என்றும் குடும்பம் நடத்த வருமாறும் கண்ணன் கூறி அவரை அழைத்துள்ளார். அதற்கு ரதிதேவி தொடர்ந்து மறுப்பு தெரிவித்ததால் கண்ணன் ஆத்திரமடைந்து தான் வைத்திருந்த கத்தியால் ரதி தேவியை சரமாரியாக குத்தினார்.
இதனால் ரத்த வெள்ளத்தில் சரிந்த ரதிதேவி உயிருக்கு போராடிய நிலையில் அவரை மீட்டு அக்கம் பக்கத்தினர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். உடனே இது குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார் கொலை தொடர்பாக வழக்குப்பதிவு செய்து கண்ணனை கைது செய்தனர். அவரிடம் தற்போது விசாரணை நடைபெற்ற வரும் நிலையில் நடத்தை சந்தேகத்தால் ஏற்பட்ட தகராறில் மனைவியை கணவன் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
