உத்தரப் பிரதேச மாநிலம் மீரட்டின் கங்கர்கேடா பகுதியில் உள்ள டிஃபென்ஸ் என்கிளேவ் பூங்கா அருகே காதல் தகராறு காரணமாக அதிர்ச்சி சம்பவம் ஒன்று நடந்துள்ளது. ஆதித்ய பிரதான் என்ற வாலிபர், தன் காதலியான அனுஷ்காவை சட்டவிரோத துப்பாக்கியால் மூன்று முறை சுட்டுவிட்டு, தானும் சுட்டுத் தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவத்தில் ஆதித்யா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
படுகாயமடைந்த அனுஷ்கா உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். ஆதித்யா மோட்டார் சைக்கிளிலும், அனுஷ்கா ஸ்கூட்டியிலும் பூங்காவிற்கு வந்து சந்தித்தபோது இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியதில் இச்சம்பவம் நடந்துள்ளது. உயிரிழந்த ஆதித்யா குற்றப்பின்னணி கொண்டவர் என்றும், சுமார் 10 நாட்களுக்கு முன்புதான் சிறையிலிருந்து வெளியே வந்தவர் என்றும் காவல்துறை தெரிவித்துள்ளனர்.
சம்பவ இடத்தில் இருந்து இரண்டு சட்டவிரோத துப்பாக்கிகளை காவல்துறை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகிறது. சம்பவ இடத்திலுள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து வருவதுடன், தடயவியல் ஆதாரங்களைச் சேகரித்தும், நேரில் பார்த்தவர்களிடம் விசாரணை நடத்தியும் வருகின்றனர். பட்டப்பகலில் நடந்த இந்த ரத்த களறி சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
