காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரை அடுத்த புதுநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் பிரியங்கா (28). இவருக்கும் கார்த்தி என்பவருக்கும் திருமணமாகி ஏழு வயதில் ஒரு பெண் குழந்தையும், ஐந்து வயதில் ஒரு ஆண் குழந்தையும் உள்ளனர். இந்நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த தனது உறவினரான முருகன் என்பவருடன் பிரியங்காவுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் அவர்களுக்குள் திருமணத்தை மீறிய உறவாக மாறியுள்ளது.
இந்த விவகாரம் பிரியங்காவின் கணவர் கார்த்தி மற்றும் முருகனின் மனைவி ஜோதி ஆகிய இருவருக்கும் தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள், பிரியங்காவைக் கடுமையாகக் கண்டித்துள்ளனர். குடும்பத்தினரிடையே ஏற்பட்ட இந்த மோதல் மற்றும் கண்டிப்பின் காரணமாக பிரியங்கா மிகுந்த மனவேதனைக்கு உள்ளானதாகக் கூறப்படுகிறது.
மன உளைச்சலில் இருந்த பிரியங்கா, வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சோமங்கலம் காவல்துறையினர், பிரியங்காவின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தாய் எடுத்த இந்த விபரீத முடிவால், அவரது இரண்டு சிறு குழந்தைகளும் தற்போது தாயின் அரவணைப்பின்றி தவித்து வருகின்றனர். ஒரு கணநேரத் தவறான முடிவும், சமூகச் சிக்கல்களும் ஒரு இளம் பெண்ணின் உயிரைப் பறித்ததோடு, ஒரு குடும்பத்தையே நிலைகுலையச் செய்துள்ள இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
