ஹிமாச்சலப் பிரதேச மாநிலம் ஹமீர்பூர் பகுதியில், சீல் வைக்கப்பட்ட சிப்ஸ் பாக்கெட்டுக்குள் உயிருடன் புழுக்கள் நெளிந்த சம்பவம் பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.சோனி குமார் என்பவர் தனது 2 வயது குழந்தைக்குக் கொடுத்த சீல் செய்யப்பட்ட சிப்ஸ் பாக்கெட்டைப் பிரித்தபோது, அதனுள் உயிருள்ள புழுக்கள் நெளிவதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.
இந்தத் தகவல் காட்டுத்தீயாய் பரவியதையடுத்து, அப்பகுதி மக்கள் மற்றும் கடை உரிமையாளர் சிப்ஸ் பாக்கெட்டைச் சோதித்தனர். அப்போது பேக் செய்யப்பட்ட அந்த சிப்ஸ் பாக்கெட்டிற்குள் புழுக்கள் நெளிவது உறுதியானது. இது குறித்து உடனடியாக உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. பிரபல நிறுவனங்களின் தயாரிப்புகளிலேயே இத்தகைய சுகாதாரமற்ற நிலை இருப்பது நுகர்வோரின் பாதுகாப்பைக் கேள்விக்குறியாக்கியுள்ளதாக மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள் அந்த சிப்ஸ் பாக்கெட்டுகளைக் கைப்பற்றி ஆய்வகத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும், அந்த குறிப்பிட்ட தொகுப்பில் (Batch) தயாரிக்கப்பட்ட மற்ற பாக்கெட்டுகளையும் விற்பனையிலிருந்து நீக்க உத்தரவிட்டுள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்துள்ளனர். குழந்தைகளின் ஆரோக்கியத்தோடு விளையாடும் இத்தகைய அலட்சியப்போக்கு குறித்து அப்பகுதி மக்களிடையே கடும் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது.
