தமிழகத்தில் ஆட்சி அமைப்பதற்கான அரசியல் களம் உச்சக்கட்ட பரபரப்பை எட்டியுள்ளது. தமிழக வெற்றிக் கழகம் (தவெக) ஆட்சியமைக்கத் தேவையான பெரும்பான்மையை எட்ட, பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவின் ஆதரவைக் கோரியுள்ளதாக அக்கட்சியின் நிர்வாகி லீமா ரோஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தவெக நிர்வாகிகள், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியுடன் தீவிர பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாகவும் அவர் உறுதிப்படுத்தியுள்ளார்.
தவெக-வுக்கு ஆதரவு அளிக்கும் விவகாரத்தில் இரு தரப்புக்கும் இடையே சுமுகமான உடன்பாடு எட்டப்பட அதிக வாய்ப்புகள் இருப்பதாக லீமா ரோஸ் குறிப்பிட்டுள்ளார். ஏற்கனவே பாஜக மற்றும் காங்கிரஸ் தரப்பில் இருந்து ஆதரவு குறித்த பேச்சுகள் அடிபடும் நிலையில், இப்போது அதிமுகவுடனான இந்த நேரடிப் பேச்சுவார்த்தை தமிழக அரசியலில் ஒரு மெகா கூட்டணியை உருவாக்குவதற்கான அறிகுறியாகப் பார்க்கப்படுகிறது.
இருப்பினும், பேட்டியின் இறுதியில் லீமா ரோஸ் ஒரு அதிரடி ‘ட்விஸ்ட்’ வைத்துள்ளார். பேச்சுவார்த்தைகள் தவெக-வுக்கு ஆதரவாகத் தொடங்கினாலும், இறுதியில் தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சிதான் அமையும் என அவர் கூறியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. தவெக-வின் ஆதரவைக் கோரிவிட்டு, இறுதியில் எடப்பாடி பழனிசாமியே முதல்வர் நாற்காலியில் அமருவார் என்ற இவரது கணிப்பு, தற்போதைய அதிகாரப் போட்டியை மேலும் சிக்கலாக்கியுள்ளது.
