உத்தரகாண்ட் மாநிலம் கைஞ்சி தாம் செல்லும் சாலையில், இருசக்கர வாகனம் ஒன்றின் அடியில் சிறுத்தை ஒன்று சிக்கிக்கொண்ட அதிர்ச்சியூட்டும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சாலையைக் கடக்க முயன்றபோது பைக் மீது மோதியதில், அந்தச் சிறுத்தையின் கால் டயருக்குள் சிக்கியதாகக் கூறப்படுகிறது. இதனால் கடும் ஆத்திரமடைந்த சிறுத்தை, அங்கு கூடியிருந்த மக்களைப் பார்த்துக் உறுமியபடி பாய்வதற்குத் தயாராக இருந்த காட்சி, பார்ப்பவர்களை உறைய வைத்தது.
இந்த ஆபத்தான சூழலிலும், அங்கிருந்தவர்கள் விலங்கைக் காப்பாற்ற முயற்சி செய்யாமல் வீடியோ எடுப்பதிலேயே மும்முரமாக இருந்தனர். சிறுத்தையின் உடல் வாகனத்திற்கு அடியில் நசுக்கப்பட்ட நிலையில், வலியால் துடித்த அந்த விலங்கு எந்த நேரத்திலும் தாக்கக்கூடும் என்பதால் யாரும் அதன் அருகில் செல்லத் துணியவில்லை. இச்சம்பவம் குறித்து இணையவாசிகள் பலர், “சுயநலமாக வீடியோ எடுப்பதை நிறுத்திவிட்டு, வனத்துறையினருக்குத் தகவல் கொடுத்து அந்த வாயில்லா ஜீவனைக் காப்பாற்றுங்கள்” எனத் தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
உத்தரகாண்ட் மலைப்பகுதிகளில் மனிதர்களுக்கும் வனவிலங்குகளுக்கும் இடையிலான மோதல்கள் தொடர்கதையாகி வருகின்றன. ஜிம் கார்பெட் தேசியப் பூங்கா அருகாமையில் இருப்பதால், இதுபோன்ற சிறுத்தைகள் அடிக்கடி சாலைகளுக்கு வருவது வழக்கம். இருப்பினும், விபத்தில் சிக்கிய வனவிலங்குகளைக் கையாளும் போது பொதுமக்கள் பாதுகாப்பான இடைவெளியைக் கடைப்பிடிப்பதோடு, வனத்துறை நிபுணர்களின் உதவியை நாடுவது மட்டுமே மனித உயிர்களுக்கும், அந்த வனவிலங்குக்கும் பாதுகாப்பைத் தரும் என்பதை இந்தச் சம்பவம் நினைவூட்டுகிறது.
