விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே கடந்த சில நாட்களாக சிறுத்தை ஒன்று சுற்றி தருவதாக பொதுமக்கள் புகார் அளித்துள்ளனர். சிறுத்தைகள் அந்த பகுதியில் தொடர்ந்து ஆடு, மாடுகளை வேட்டையாடி வருவதால் மக்கள் பீதியில் இருந்தனர். இன்று காலை விக்கிரவாண்டி சுங்க சாவடி அருகே உள்ள பாலத்தின் மேல் சிறுத்தை ஒன்று இறந்த நிலையில் கிடந்தது. இதனை பார்த்த வாகன ஓட்டிகள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு சென்ற வனத்துறையினர் மூன்றரை வயதுடைய ஆண் சிறுத்தை படுகாயங்களுடன் இறந்து கிடந்ததை கண்டனர். நெடுஞ்சாலையை கடக்க முயற்சி செய்தபோது அதிவேகமாக வந்த வாகனம் மோதி சிறுத்தை உயிரிழந்திருக்கலாம் என வனத்துறையினர் கூறியுள்ளனர். இருப்பினும் பிரேத பரிசோதனைக்கு பிறகு தான் உண்மையான காரணம் தெரியவரும் என அதிகாரிகள் கூறியுள்ளனர்.
