“என் கணவர் தான் கிடைச்சாரா? .. சும்மா சும்மா இழுக்குறீங்க”…. நாங்க ஒன்னும் கள்ளத்தனமா பண்ணல…. பேரவையில் திமுகவை அலறவிட்ட மார்ட்டின் மனைவி….!

By Nanthini on ஆவணி 26, 2026

Spread the love

தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் சூழலில், சட்டப்பேரவையில் தனது கணவரும் பிரபல தொழிலதிபருமான மார்ட்டின் குறித்து தேவையின்றிப் பேசுவதைத் தவிர்க்க வேண்டும் என திமுகவினருக்கு அதிமுக எம்.எல்.ஏ. லீமா ரோஸ் கடுமையான எச்சரிக்கையையும் வேண்டுகோளையும் விடுத்துள்ளார். முன்னதாக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா தொடர்பாகப் பேசும்போது, திமுகவினர் தொடர்ந்து லாட்டரி தொழிலைக் குறிப்பிட்டு விமர்சித்து வந்தனர். இருப்பினும், லாட்டரி அதிபர் மார்ட்டினின் மருமகனான ஆதவ் அர்ஜூனா, தான் தற்போது அந்தத் தொழிலில் ஈடுபடவில்லை என்று ஏற்கனவே விளக்கம் அளித்து விட்ட நிலையிலும், பேரவையில் இப்பொருள் தொடர்ந்து பேசப்படுவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக லீமா ரோஸ் தெரிவித்துள்ளார்.

நேற்று சட்டப்பேரவை நிகழ்வுகளுக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த லீமா ரோஸ், தான் பேரவையில் எழுப்பிய கேள்விகள் குறித்துப் பேசினார். “சபாநாயகரிடம் எனது லால்குடி தொகுதிக்கான முக்கியக் கோரிக்கைகளை முன்வைக்கவே நான் எழுந்தேன். லால்குடியை விவசாயம் மற்றும் அதன் சார்ந்த சிறுகுறு தொழில்களின் மையமாக மாற்ற வேண்டும் என்றும், அங்குள்ள இளைஞர்களின் வேலைவாய்ப்பிற்காகப் புதிய தொழில் முதலீடுகளை ஈர்த்து வசதிகளைச் செய்து தர வேண்டும் என்றும் வலியுறுத்தினேன். மேலும், சுயஉதவிக் குழுப் பெண்களின் தயாரிப்புப் பொருட்களைச் சந்தைப்படுத்துவதற்கான வாய்ப்புகளை உருவாக்கித் தர வேண்டும் எனக் கேட்டுக் கொண்டேன்” என்று அவர் குறிப்பிட்டார்.

   

தொடர்ந்து தனது கணவர் குறித்தான விமர்சனங்களுக்குப் பதிலளித்த அவர், “முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு பதிலளித்துப் பேசும்போது எனது கணவர் மார்ட்டின் பற்றி தேவையின்றி இழுத்துப் பேசினார். நிதியமைச்சர் எழுப்பிய கேள்விக்கு முறையான பதிலளிப்பதை விடுத்து, எனது கணவரைப் பற்றிப் பேசுவது ஏன்? எனது கணவர் பிற மாநிலங்களில்தான் சட்டப்பூர்வமாக லாட்டரி விற்பனை செய்து வருகிறார். பேரறிஞர் அண்ணா கொண்டு வந்த இந்த வணிகத்தை, அனைத்து வரிகளையும் சரியாகச் செலுத்தி சட்டப்படிதான் நாங்கள் நடத்தி வருகிறோம். ஆனால், சட்டப்பேரவையில் இந்தத் தொழிலைக் கொச்சைப்படுத்தும் வகையிலும் அரசியலாக்கும் வகையிலும் திமுகவினர் பேசி வருகின்றனர். எனது மருமகன் ஆதவ் அர்ஜூனாவும் இத்தொழிலில் இருந்து முழுமையாக வெளியேறிவிட்டார்” எனக் காரசாரமாகத் தெரிவித்தார்.

   

மேலும் உச்ச நீதிமன்றத் தீர்ப்பைச் சுட்டிக்காட்டிய அவர், “ஒவ்வொரு மாநிலத்திலும் முதலமைச்சரின் அனுமதியோடு லாட்டரி விற்பனை மேற்கொள்ளலாம் என உச்ச நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது. வருமான வரி உட்பட அனைத்து வரிகளையும் நாங்கள் முறையாகச் செலுத்தி வருகிறோம். ஏதோ நாங்கள் கள்ளத்தனமாகத் தொழில் செய்வது போலச் சித்தரிப்பது முற்றிலும் தவறானது. திமுகவினர் தங்கள் மீதுள்ள தவறுகளை மறைப்பதற்காகவே ‘லாட்டரி, லாட்டரி’ எனத் தொடர்ந்து பேசி வருகின்றனர். எனவே, சட்டப்பேரவையில் தேவையில்லாமல் எனது கணவர் பற்றியும் இத்தொழில் பற்றியும் பேசுவதைத் திமுகவினர் உடனடியாகத் தவிர்க்க வேண்டும்” எனத் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.