இனி ஒரு நாள் கூட லேட் ஆகக்கூடாது.. மாவட்ட ஆட்சியர்களுக்கு வந்த ‘கெடு’… 15 ரயில்வே திட்டங்களின் லேட்டஸ்ட் அப்டேட்.. தமிழக அரசின் அதிரடி ஆக்ஷன் பிளான்..!!

By Muthu Mani on ஆனி 3, 2026

Spread the love

தமிழ்நாட்டில் செயல்படுத்தப்பட்டு வரும் புதிய ரயில் திட்டப் பணிகளுக்கு நிலம் கையகப்படுத்துவதில் இனி எந்தவிதமான சிக்கலோ அல்லது கால தாமதமோ இருக்கக்கூடாது என்று அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் மாநில அரசு திட்டவட்டமாக அறிவுறுத்தியுள்ளது. குறிப்பாக, ஐந்து முக்கிய அரசுத் துறைகளை ஒன்றிணைத்து, ரயில்வே பணிகளுக்கான நில ஒதுக்கீட்டை மிக விரைவாக முடிக்குமாறு மாவட்ட ஆட்சியர்களுக்குத் தேவையான அதிரடி வழிகாட்டுதல்களையும் வழங்கி உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் மொத்தம் 22,808 கோடி ரூபாய் மாபெரும் மதிப்பீட்டில், 1,700 கிலோமீட்டர் தூரத்திற்கு ஒன்பது புதிய ரயில் பாதைகள் மற்றும் மூன்று இரட்டை ரயில் பாதை திட்டங்கள் உட்பட மொத்தம் 15 புதிய ரயில் பாதை திட்டங்களுக்கு மத்திய ரயில்வே துறை நிதி உதவி வழங்கி வருகிறது. இத்திட்டங்களுக்கு ஒட்டுமொத்தமாக 4,326 ஹெக்டேர் நிலம் தேவைப்படுகிறது. ஆனால், இதில் சுமார் 75 சதவீத நிலம் (3,274 ஹெக்டேர்) இன்னும் கையகப்படுத்தப்படாமல் நிலுவையில் உள்ளதாகத் தெற்கு ரயில்வே தரப்பில் மாநில அரசுக்குத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

   

இந்த நிலப் பற்றாக்குறை காரணமாக மதுரை – அருப்புக்கோட்டை – தூத்துக்குடி திட்டம், திண்டிவனம் – செஞ்சி – திருவண்ணாமலை திட்டம், சென்னை – புதுச்சேரி – கடலூர் திட்டம், ஆவடி – ஸ்ரீபெரும்புதூர் – கூடுவாஞ்சேரி திட்டம், தஞ்சாவூர் – பட்டுக்கோட்டை திட்டம் மற்றும் ராமேஸ்வரம் – தனுஷ்கோடி உள்ளிட்ட பல்வேறு முக்கிய ரயில் பாதை திட்டங்கள் பல ஆண்டுகளாகக் கடுமையான கால தாமதத்தைச் சந்தித்து வருகின்றன. இந்த நிலப் பற்றாக்குறையைத் தீர்த்து, முடங்கிக் கிடக்கும் பணிகளை விரைந்து தொடங்கக் கோரி தெற்கு ரயில்வே தரப்பில் ஏற்கனவே அதிகாரப்பூர்வமாகக் கடிதம் அனுப்பப்பட்டிருந்தது.

   

இதனைத் தொடர்ந்து தற்போது அதிரடியாகக் களம் இறங்கியுள்ள தமிழக அரசு, போக்குவரத்துத் துறை, வருவாய்த் துறை, ஊரக வளர்ச்சித் துறை, நெடுஞ்சாலைத் துறை மற்றும் நீர் வளத் துறை ஆகிய ஐந்து முக்கியத் துறைகளை ஒருங்கிணைத்துச் செயல்படுமாறு மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிட்டுள்ளது. மேலும், ரயில்வே திட்டங்களுக்காகக் குறிக்கப்பட்ட இடங்களில் ஏதேனும் மாநில அரசு சார்ந்த திட்டப் பணிகள் நடைபெறுகிறதா என்பதை ஆட்சியர்கள் நேரடியாகக் கண்காணித்து ஆய்வு செய்ய வேண்டும் என்றும், அதன் பிறகு எந்தவிதத் தடையுமின்றி உடனடியாகத் தேவையான நிலத்தை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.