தூத்துக்குடியில் காதணி விழாவில் உணவு பரிமாறியதில் ஏற்பட்ட சிறு தகராறு, வாலிபர் ஒருவரின் கொலையில் முடிந்திருப்பது அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி கோரம்பள்ளம் பகுதியைச் சேர்ந்த காலன் என்பவரின் மகன் பெரியநாயகம் (33). திருமணமாகி இரண்டு குழந்தைகளைக் கொண்ட இவர், தனது உறவினரான செந்தூர்க்கனி என்பவரது வீட்டு காதணி விழாவில் பங்கேற்பதற்காக விருதுநகர் மாவட்டம் இருக்கன்குடிக்குச் சென்றுள்ளார். அங்கு உறவினர்களுடன் சேர்ந்து மது அருந்திய பெரியநாயகம், விழா நடக்கும் இடத்திற்குச் செல்லாமல் காரிலேயே தங்கியிருந்ததாகக் கூறப்படுகிறது.
நிகழ்ச்சி முடிந்ததும் பெரியநாயகத்தின் உறவினர்கள் அவருக்கு எனத் தனியாக ஒரு தட்டில் உணவு எடுத்துச் சென்று காரிலேயே பரிமாறியுள்ளனர். இதைப் பார்த்த உறவினர் முனியசாமி என்பவர், “நாங்கள் மட்டும் வரிசையில் காத்திருக்க வேண்டும், இவருக்கு மட்டும் என்ன தனி உபசரிப்பு?” எனக் கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அங்கிருந்த மற்ற உறவினர்கள் தலையிட்டு இரு தரப்பினரையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்துள்ளனர். இருப்பினும், இந்தச் சிறு கசப்புணர்வு ஒரு பெரும் வன்முறைக்கு வித்திடும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை.
இந்தத் தகராறால் மனமுடைந்த பெரியநாயகம் மற்றும் அவரது உறவினர்கள், விழாவைப் பாதியிலேயே முடித்துக்கொண்டு ஊருக்குப் புறப்பட்டனர். அவர்கள் எட்டயபுரம் அருகே உள்ள கீழ ஈராலில் ஒரு டீக்கடையில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தபோது, பின் தொடர்ந்து வந்த முனியசாமியும் அவரது உறவினரும் குடிபோதையில் பெரியநாயகத்தை வழிமறித்துள்ளனர். கண்ணிமைக்கும் நேரத்தில் மறைத்து வைத்திருந்த அரிவாளால் பெரியநாயகத்தை அவர்கள் சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பியோடினர். ரத்த வெள்ளத்தில் சரிந்த பெரியநாயகம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
தகவலறிந்து வந்த எட்டயபுரம் காவல்துறையினர், பெரியநாயகத்தின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காகத் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்தச் சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், கொலையாளிகளைப் பிடிக்கத் தனிப்படை அமைத்துத் தீவிரமாகத் தேடி வருகின்றனர். ஒருவேளை உணவிற்காக ஏற்பட்ட சிறு வாய் தகராறு, ஒரு குடும்பத்தின் வாழ்வாதாரத்தையே சிதைத்து கொலையில் முடிந்தது அப்பகுதி மக்களிடையே மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
