காதலை மறுத்த இளம்பெண்.. மண்ணெண்ணெய் பாட்டில்களுடன் வந்த 4 பேர்… கோவையில் நூலிழையில் உயிர் தப்பிய குடும்பம்… உச்சக்கட்ட பரபரப்பு…!

By Nanthini on வைகாசி 25, 2026

Spread the love

கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் அருகே உள்ள கலிக்கநாயக்கன்பாளையம், சிபிசி கார்டன் பகுதியில் காதலை மறுத்த இளம்பெண்ணின் வீட்டின் மீது மண்ணெண்ணெய் நிரப்பிய பாட்டில்களை வீசி எறிந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில் தொண்டாமுத்தூர் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பாதிக்கப்பட்ட இளம்பெண் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தபோது, சென்னையைச் சேர்ந்த கார்த்திக் (என்கிற) மாரியப்பன் என்ற வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் கார்த்திக் மீது தமிழ்நாடு முழுவதும் பல்வேறு காவல் நிலையங்களில் 31-க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பது அந்த இளம்பெண்ணுக்கு தெரியவந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர், கார்த்திக்குடனான காதலை முறித்துக் கொண்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கார்த்திக், தொடர்ந்து அந்தப் பெண்ணை தொந்தரவு செய்து வந்ததாகக் கூறப்படுகிறது.

   

இந்த நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை கார்த்திக் தனது நண்பர்கள் மூன்று பேருடன் கேடிஎம் (KTM) மற்றும் பல்சர் ஆகிய இருசக்கர வாகனங்களில் இளம்பெண்ணின் வீட்டிற்கு வந்துள்ளார். அவர்கள் மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணெய் நிரப்பிய பீர் மற்றும் மதுபான பாட்டில்களை வீட்டின் மீது வீசி எறிந்து தாக்குதல் நடத்தியுள்ளனர். மேலும், வீட்டின் வெளியில் நின்று கொண்டிருந்த இளம்பெண்ணின் தந்தையும், தாளியூர் பேரூராட்சியில் பிட்டராக பணிபுரிந்து வருபவருமான சுந்தரமூர்த்தியை தகாத வார்த்தைகளால் திட்டி, கொலை மிரட்டல் விடுத்துவிட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளனர்.

   

அவர்கள் வீசிய பாட்டில்களில் ஒன்று வெடித்து, வீட்டின் போர்டிகோ பகுதியில் இருந்த செருப்பு ஸ்டாண்ட் மீது விழுந்து தீப்பற்றி எரிந்தது. அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் யாருக்கும் எந்தக் காயமும் ஏற்படவில்லை. இது குறித்து சுந்தரமூர்த்தி அளித்த புகாரின் பேரில், கார்த்திக் உள்ளிட்ட 4 பேர் மீது தொண்டாமுத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும், அப்பகுதியில் உள்ள சிசிடிவி (CCTV) காட்சிகளை ஆய்வு செய்து, தலைமறைவாக உள்ள குற்றவாளிகளை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.