“அன்னைக்கே நான் சொன்னேன்.. இபிஎஸ் தான் கேட்கல”… இன்னைக்கு தோத்ததுக்கு காரணமே அதுதான்… பகீர் கிளப்பிய கே.சி பழனிசாமி…!

By Swetha on வைகாசி 7, 2026

Spread the love

அதிமுகவின் தற்போதைய பின்னடைவு மற்றும் வீழ்ச்சிக்கு எடப்பாடி பழனிசாமியின் தன்னிச்சையான செயல்பாடுகளே காரணம் என்று முன்னாள் எம்.பி கே.சி.பழனிசாமி கடுமையாகச் சாடியுள்ளார். 2026 தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகளின் பின்னணியில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகே அதிமுகவை ஒன்றிணைக்க வேண்டும் என்று தான் வலியுறுத்தியதாகவும், அதனை எடப்பாடி பழனிசாமி ஏற்க மறுத்ததே இன்று கட்சி பலவீனமடைய முதன்மைக் காரணம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

கட்சியில் இருந்து ஓரங்கட்டப்பட்ட பல முக்கிய நிர்வாகிகள் இன்று திமுக மற்றும் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) ஆகிய கட்சிகளில் இணைந்து சட்டமன்ற உறுப்பினர்களாக வெற்றி பெற்றுள்ளதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தேர்தலுக்கு முன்பு கட்சியினரின் ஆதரவைப் புறக்கணித்த எடப்பாடி பழனிசாமி, தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு தவெக மற்றும் திமுகவிடம் ஆதரவு கோரி மன்றாடுவது கட்சியின் பரிதாப நிலையை வெளிப்படுத்துவதாக கே.சி.பழனிசாமி விமர்சித்துள்ளார். ‘கூவத்தூர் பழனிசாமி’யாக இருந்தவர் தற்போது ‘பாண்டிச்சேரி பழனிசாமி’யாக மாறி மீண்டும் ரிசார்ட் கலாச்சாரத்திற்குச் சென்றிருப்பதாக அவர் எள்ளி நகையாடியுள்ளார்.

   

அதிமுகவின் பலம் வெகுவாகக் குறைந்து, ஒரு சிறிய அறையில் கூட்டத்தை நடத்தும் அளவுக்குச் சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை சுருங்கிவிட்டதாகக் கூறியுள்ள அவர், இனியாவது எடப்பாடி பழனிசாமி தனது தவறுகளைத் திருத்திக்கொள்ள வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். அவ்வாறு அவர் மாறத்தவறினால், அதிமுக தொண்டர்களே முன்வந்து இத்தகைய தலைமையைத் திருத்த வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுவார்கள் என்றும், இல்லையெனில் கட்சி எதிர்காலத்தில் இன்னும் பெரிய வீழ்ச்சியைச் சந்திக்கும் என்றும் அவர் ஆவேசமாகத் தெரிவித்துள்ளார்.