கண்ணதாசனை நடுத்தெருவில் நிறுத்திய சந்திரபாபு… ஆனாலும் கவியரசர் செய்தது தான் ஹைலைட்..

By vinoth on மாசி 24, 2024

Spread the love

தமிழ் சினிமாவில் கோலோச்சிய நகைச்சுவை நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் சந்திரபாபு. மற்ற நகைச்சுவை நடிகர்களை விட சந்திரபாபுவின் தனித்திறன் என்பது  அவர் ஒரு பன்முகத்திறன் கொண்ட கலைஞர் என்பதுதான். சந்திரபாபு வெறும் நடிகராக மட்டும் இல்லாமல் பாடல்கள் பாடுவது, நடனமாடுவது, படத்தை இயக்குவது என பல துறைகளிலும் ஜொலித்தவர்.

வெற்றிகரமான நடிகராக வலம் வந்த சந்திரபாபு, தன்னுடைய 50 வயதுக்குள்ளாகவே அகால மரணமடைந்தார். அதற்கு அவரின் மோசமான குடிப்பழக்கமே காரணம் என்று சொல்லப்படுகிறது. சந்திரபாபு நகைச்சுவை நடிகராக மக்களை சிரிக்க வைத்தாலும், அவர் வாழ்வில் அவர் சந்தித்தது பெரும்பாலும் சோகங்களே. அவர் திருமணம் செய்த பெண், வேறு ஒருவரை காதலிப்பதாக சொன்னதால் அவரை பிரிந்தவர் சந்திரபாபு.

   

இதனால் தன்னுடைய சினிமா வாழ்க்கையில் முழுவதுமாக கவனம் செலுத்த முடியாமல் தவித்துள்ளார். அப்படி ஒரு சூழ்நிலையில்தான் சந்திரபாபுவை கதாநாயகனாக வைத்து கவிஞர் கண்ணதாசன் ‘கவலையில்லாத மனிதன்’ என்ற படத்தை தயாரித்துள்ளார். ஆனால் அந்த படத்தில் ஒழுங்காக நடித்துக் கொடுக்காமல் இழுத்தடித்துள்ளார் சந்திரபாபு. இதனால் அந்த படம் தாமதமாகி இறுதியில் ரிலீஸ் ஆகி தோல்வி படமாக அமைந்தது. கவலை இல்லாத மனிதன் படத்தை எடுத்து நான் கவலை உள்ள மனிதனாக மாறினேன் என கண்ணதாசன் புலம்பியுள்ளார்.

   

அதனால் கண்ணதாசனுக்கும் சந்திரபாபுவுக்கும் இடையே இருந்த நட்பில் விரிசல் விழுந்துள்ளது. ஆனாலும் அதை மனதில் வைத்துக் கொள்ளாமல் சந்திரபாபு ஒரு இக்கட்டான சூழலில் இருக்கும்போது கண்ணதாசன் உதவி செய்துள்ளார். சந்திரபாபு தட்டுங்கள் திறக்கப்படும் என்ற படத்தை இயக்கியுள்ளார். அதன் க்ளைமேக்ஸ் காட்சியில் ஒரு ஐந்து வயது குழந்தை தன் தந்தையை துப்பாக்கியால் சுட்டுக்கொல்வது போல அமைத்திருக்கிறார்.

 

இந்த காட்சியை அனுமதிக்க முடியாது என சென்சார் போர்ட் அதிகாரிகள் கூறியுள்ளனர். இந்த விஷயத்தை அறிந்துகொண்ட கண்ணதாசன் சென்சார் அதிகாரிகளிடம் சந்திரபாபுவுக்காக பரிந்து பேசியுள்ளார். அதனால் அந்த காட்சியை நேரடியாகக் காட்டாமல் கதாநாயகியின் முகத்தில் அதிர்ச்சி ஏற்படுவது போல மாற்றி வைக்க சென்சார் அதிகாரிகள் சம்மதித்துள்ளனர். இந்த க்ளைமேக்ஸ் உடன்தான் தட்டுங்கள் திறக்கப்படும் திரைப்படம் ரிலீஸ் ஆனதாம்.