2026 தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ள நிலையில், திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி, தொகுதிப் பங்கீடு குறித்த தனது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தியுள்ளது. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடாமல் ஒதுங்கியிருந்த மநீம, வரும் சட்டமன்றத் தேர்தலில் 6 தொகுதிகளைக் குறிவைத்து களம் காணத் தயாராகி வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
குறிப்பாக, கமல்ஹாசன் கடந்த முறை நூலிழையில் வெற்றியைத் தவறவிட்ட கோவை தெற்கு தொகுதியுடன் சேர்த்து மயிலாப்பூர், வேளச்சேரி, விருகம்பாக்கம், ஆலந்தூர் மற்றும் மதுரை மத்திய ஆகிய தொகுதிகளைப் பெறுவதில் கட்சி உறுதியாக உள்ளது. கட்சியின் அடையாளத்தைப் பாதுகாக்கும் வகையில், உதயசூரியன் சின்னத்திற்குப் பதில் தங்களின் சொந்தச் சின்னமான ‘டார்ச் லைட்’ சின்னத்திலேயே போட்டியிட வேண்டும் என்பதில் மநீம நிர்வாகிகள் தீவிரமாக இருக்கின்றனர்.
சமீபத்தில் நடைபெற்ற கட்சியின் பொதுக்குழு கூட்டத்தில், பூத் கமிட்டி அமைப்பதில் உள்ள சுணக்கம் குறித்து கமல்ஹாசன் தனது வருத்தத்தைப் பதிவு செய்திருந்தார். தன்னை ஒரு “தோற்றுப்போன அரசியல்வாதி” என்று அவர் குறிப்பிட்டது தொண்டர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தினாலும், அதனை ஒரு சவாலாக எடுத்துக் கொண்டு களப்பணியாற்ற நிர்வாகிகள் முடிவெடுத்துள்ளனர். வெறும் பேச்சோடு நிற்காமல், மக்கள் போராட்டங்களை முன்னெடுத்து கட்சியின் செல்வாக்கை உயர்த்த வேண்டும் எனத் தலைமைக்கு அவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
பிப்ரவரி 22-ம் தேதி முதல் திமுக தனது கூட்டணிக் கட்சிகளுடன் அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தையைத் தொடங்க உள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட இடங்கள் மற்றும் விசிக, மதிமுக போன்ற கட்சிகளின் கோரிக்கைகளுக்கு மத்தியில், மக்கள் நீதி மய்யம் தனக்கான 6 இடங்களை உறுதி செய்யத் திட்டமிட்டுள்ளது. கமல்ஹாசனின் இந்த வியூகம் வரும் தேர்தலில் அக்கட்சிக்குத் திருப்புமுனையாக அமையுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
