தமிழ் சினிமாவில் கிளாசிக் இசையமைப்பாளர்களான வேதா, எம்.எஸ்.வி ஆகியோரின் வரிசையில் இடம்பெற்றவர் டி.ஆர்.பாப்பா. 1922 ஆம் ஆண்டு திருத்துறைப்பூண்டியில் பிறந்த இவரது உண்மையான பெயர் சிவசங்கரன்.
1952 ஆம் ஆண்டு ஜோசஃப் தெலியத் இயக்கிய “ஆத்மசாந்தி” என்ற திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் டி.ஆர்.பாப்பா. அதனை தொடர்ந்து பல சினிமா கம்பெனிகள் தயாரித்த வெற்றித் திரைப்படங்களுக்கு இசையமைத்தார்.
“இரவும் வரும் பகலும் வரும்”, “ஒன்னுமே புரியல உலகத்துல” போன்ற காலத்தால் நிற்கும் பல பாடல்களுக்கு இசையமைத்தவர் டி.ஆர்.பாப்பா. இவ்வாறு அக்காலகட்டத்தில் தமிழ் சினிமாவின் மிக முக்கியமான இசையமைப்பாளராக திகழ்ந்தவர் இவர்.
இந்த நிலையில் சமீபத்தில் தனது வீடியோ ஒன்றில் பேசிய பிரபல தயாரிப்பாளரும் நடிகருமான சித்ரா லட்சுமணன், கலைஞர் மற்றும் டி.ஆர்.பாப்பா ஆகியோரை குறித்த ஒரு சம்பவத்தை பகிர்ந்துகொண்டுள்ளார்.
அதாவது கலைஞர் எழுதிய பல பாடல்களுக்கு டி.ஆர்.பாப்பா இசையமைத்துள்ளாராம். கலைஞரை பொறுத்தவரை அவர் பாடல் எழுதி கொடுத்தவுடனே அந்த பாடலுக்கு மெட்டமைக்க வேண்டும் என விரும்புவாராம். ஆனால் டி.ஆர்.பாப்பா எப்போதுமே ஒரு பாடலுக்கு மெட்டமைக்கும்போது அந்த பாடலை நன்றாக படித்து புரிந்துகொண்டு அதன் பின்புதான் மெட்டமைப்பாராம்.
ஆனால் கலைஞர் அதுவரை காத்திருக்கமாட்டாராம். அவரது வற்புறுத்தலின் பெயரில் பல பாடல்களுக்கு இசையமைத்திருக்கிறாராம் டி.ஆர்.பாப்பா. பாடல் வரிகளில் சில வார்த்தைகள் நெருடலாக இருந்தாலும் உடனே மாற்றிக்கொடுப்பாராம் கலைஞர். இவ்வாறு டி.ஆர்.பாப்பா, கலைஞருடன் பணியாற்றிய அனுபவங்கள் குறித்து பேசியிருக்கிறாராம்.