திமுக கூட்டணியில் இருந்து வெளியேறுவது என்ற மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் முடிவு தவறானது என்று கடையநல்லூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் இராசேந்திரன் காரசாரமாக விமர்சித்துள்ளார். கடந்த தேர்தலில் திமுகவின் ‘உதயசூரியன்’ சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற அவர், தங்களை கட்சி, சாதி, மதம் என அனைத்து எல்லைகளையும் கடந்து ஆதரித்து வெற்றி பெறச் செய்த கடையநல்லூர் தொகுதி மக்களின் உணர்வுகளுக்குத் தான் மதிப்பளிக்கப் போவதாகத் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
வாக்களித்த மக்களின் நம்பிக்கையைக் காப்பதே தனது முதல் கடமை என்பதால், வைகோவின் முடிவிற்கு இணங்கித் தனது பதவியை ராஜினாமா செய்யப் போவதில்லை என்றும், சட்டமன்ற உறுப்பினராகத் தொடர்ந்து மக்கள் பணியாற்றுவேன் என்றும் அவர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
