அதிமுக முன்னாள் அமைச்சர்களான உடுமலை ராதாகிருஷ்ணன், எம்.சி.சம்பத், கடம்பூர் ராஜு, என்.ஆர்.சிவபதி மற்றும் பல முன்னாள் எம்.எல்.ஏக்கள், நிர்வாகிகள் தங்களை அதிமுகவிலிருந்து விடுவித்துக்கொண்டு, தற்போதைய ஆளும்கட்சியான தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) இணைந்துள்ளனர். இதுகுறித்து கிருஷ்ணகிரியில் செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுக துணைப் பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி, அதிமுகவில் பல்வேறு பதவிச் சுகங்களை அனுபவித்தவர்களே தற்போது கட்சி மாறியுள்ளதாகக் குறிப்பிட்டார். மேலும், இந்த இணைவு விழாவில் தவெக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேசிய கருத்துகளுக்கு அவர் தனது கடுமையான கண்டனங்களை முன்வைத்தார்.
செய்தியாளர் சந்திப்பில் ஆதவ் அர்ஜுனாவை ‘சந்தர்ப்பவாதி’ என்று சாடிய கே.பி.முனுசாமி, அவர் நெல்முள் குருவி போல வாய்ப்பு தேடி திமுக, விசிக, அதிமுக என மாறி மாறிச் சென்று, இறுதியாக தவெகவில் இணைந்து அமைச்சராகியுள்ளார் என்று விமர்சித்தார். “அதிமுக தொண்டர்கள் வாக்களித்துதான் தவெக வெற்றி பெற்றது” என்று ஆதவ் அர்ஜுனா கூறியதற்குப் பதிலடி கொடுத்த முனுசாமி, எந்தப் பிரதிபலனும் எதிர்பாராமல் தலைமைக்காக உழைக்கும் அதிமுக தொண்டர்களைக் கொச்சைப்படுத்துவதை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்றும், இல்லையெனில் நேரடியாக அவரை எதிர்த்துப் போராட்டம் நடத்தப்படும் என்றும் எச்சரித்தார்.
தொடர்ந்து பேசிய கே.பி.முனுசாமி, அரசியலில் தர்மமும் பண்பும் இருக்க வேண்டும் என்றும், பேப்பரில் மட்டுமே எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளர் என்று கூறும் ஆதவ் அர்ஜுனாவுக்கு நாவடக்கம் தேவை என்றும் கூறினார். அதிமுகவையும் திமுகவையும் ‘பங்காளிகள்’ எனக் குறிப்பிட்ட அவர், தவெக என்பது ஒரு சினிமா நடிகரால் தொடங்கப்பட்ட இயக்கம் என்றார். மேலும், சட்டமன்றத் தேர்தலில் தவெகவுக்கு வாக்களித்த மக்களுக்கு அந்த இயக்கம் நம்பிக்கை துரோகம் செய்துவிட்டதாகவும், தவெகவினர் தங்களை நிலைநிறுத்திக் கொள்ள பிற கட்சிகளைப் பலிகடா ஆக்கி, அதிமுக மீது வன்மத்தைக் காட்டுவதாகவும் குற்றம் சாட்டினார்.
இறுதியாக, பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை தொடங்கவிருக்கும் புதிய மக்கள் இயக்கத்திற்குத் தனது வாழ்த்துகளைத் தெரிவித்த கே.பி.முனுசாமி, அவர் தமிழ்நாட்டு மக்களை ஏமாற்றாமல் இருக்க வேண்டும் என்று குறிப்பிட்டார். அண்ணாமலை தனது குறுகிய அரசியல் வாழ்க்கையில் கருத்துகளை அடிக்கடி மாற்றிக் கொள்வதாகவும், தற்போது ‘கூட்டுத் தலைமை’ மற்றும் ‘யாருக்கும் எந்தப் பதவியும் நிரந்தரமில்லை’ என்ற பெரிய கருத்தைத் தெரிவித்துள்ளதாகவும் கூறிய முனுசாமி, இதனுடைய விளைவுகளைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் என்று கூறி தனது பேட்டியை நிறைவு செய்தார்.
