CINEMA
ஒரு லட்சம் ரூபாய் சம்பளம் வாங்கிய முதல் நகைச்சுவை நடிகர்.. ஆனா அடுத்த படத்தில் 5000 ரூபாய்க்கு நடித்துக் கொடுத்த நல்ல மனிதர்!
தமிழ் சினிமாவில் கோலோச்சிய நகைச்சுவை நடிகர்களின் பட்டியலை போட்டால் அதில் தவிர்க்க முடியாத ஒரு இடத்தில் இருப்பார் கே ஏ தங்கவேலு. எம் ஆர் ராதா, பாலையா, சந்திரபாபு, நாகேஷ், கே ஏ தங்கவேலு,தேங்காய் சீனிவாசன், சுருளிராஜன், கவுண்டமணி, செந்தில், வடிவேலு, விவேக், சந்தானம், சூரி, யோகி பாபு என மிகப்பெரிய பாரம்பரியமே உள்ளது.
ஸ்ரீதர் இயக்கிய கல்யாணப் பரிசு திரைப்படம்தான் தங்கவேலுவை புகழ் வெளிச்சத்துக்குக் கொண்டு வந்தது. அந்த படத்தில் மண்ணாரங் கம்பெனியில் வேலை பார்ப்பதாக சொல்லி அவர் அடிக்கும் லூட்டி அவரை ரசிகர்களின் ஆதர்ஸ நகைச்சுவை நடிகராக்கியது.
இதையடுத்து பல படங்களில் நடித்து வந்த அவர் புகழின் உச்சிக்கு சில ஆண்டுகளிலேயே சென்றார். அப்போது அவர் நடித்த ஒரு படம்தான் பாக்கியவதி. எல் வி பிரசாத் இயக்கிய இந்த படத்தில் அவருக்கு ஒரு லட்ச ரூபாய் சம்பளம் கொடுக்கப்பட்டதாம். தமிழ் நகைச்சுவை நடிகர்களில் ஒருவர் ஒரு லட்சம் ரூபாய் சம்பளம் பெற்றது அதுவே முதல்முறை. ஆனால் பலரும் அறியாத தகவல் இது.
இதுபற்றி சினிமா பத்திரிக்கையாளரான சித்ரா லட்சுமனன் ஒரு வீடியோவில் பேசியுள்ளார். அதில் தனக்கும் இந்த தகவல் தெரியாது என்றும் இதை கதாசிரியர் காரைக்குடி நாராயணன்தான் தன்னிடம் சொன்னார் என்றும் கூறியுள்ளார். அதில் காரைக்குடி நாராயணன் அவரிடம் “நான் எடுக்க இருந்த படத்துக்கு ஒப்பந்தம் செய்ய தங்கவேலுவை சென்று சந்தித்தேன். அவரிடம் கதைக் கூறிவிட்டு கடைசியாக சம்பளம் எவ்வளவு என்று கேட்டேன்.
அவர் கடைசியாக நடித்த பாக்கியவதி படத்தில் ஒரு லட்ச ரூபாய் சம்பளம் வாங்கினேன். நீங்கள் என்ன கொடுப்பீர்கள் எனக் கேட்டார். நான் அதைக் கேட்டு அதிர்ச்சியாகிவிட்டேன். ஏனென்றால் நான் அவருக்குக் கொடுக்க நினைத்தது 5000 தான். அதை தயங்கி தயங்கி சொன்னேன். அதைக் கேட்டு அவர் சிரித்துக்கொண்டே மனைவியை அழைத்து அவரிடம் சொல்ல “என் கணவருக்கு 5000 தான் சம்பளமா’ எனக் கேட்டார். எனக்கு ஒரு மாதிரி ஆகிவிட்டது. ஆனாலும் அந்த படத்தில் 5000 ரூபாய் சம்பளத்துக்குதான் அவர் நடித்துக் கொடுத்தார்” எனக் கூறினாராம்.