சர்வதேச நிதிச் சந்தையில் ஜேபி மோர்கன் சேஸ் (JPMorgan Chase) நிறுவனம் உலகப் புகழ்பெற்றது. இந்த நிறுவனத்தின் உயர் அதிகாரியான லோர்னா ஹஜ்தினி என்பவர் மீது, அதே நிறுவனத்தில் பணியாற்றிய இந்திய இளைஞர் ஒருவர் பாலியல் அத்துமீறல் மற்றும் இனவெறி புகார்களை முன்வைத்து நியூயார்க் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார். சுமார் 15 ஆண்டுகளாக இந்நிறுவனத்தில் பணியாற்றி வரும் லோர்னா, தற்போது ‘லிவரேஜ்டு ஃபைனான்ஸ்’ பிரிவின் நிர்வாக இயக்குநராக உள்ளார். இந்த உயர்மட்ட அதிகாரி மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் கார்ப்பரேட் உலகில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
பாதிக்கப்பட்ட இளைஞர் அளித்துள்ள புகாரில், லோர்னா தன்னை “பிரவுன் இந்தியன்” என்று இனவெறியுடன் அழைத்ததாகவும், தனது பாலியல் இச்சைகளுக்கு அடிபணியச் சொல்லி மிரட்டியதாகவும் தெரிவித்துள்ளார். குறிப்பாக, அந்த இளைஞருக்குத் தெரியாமல் உணவில் மயக்க மருந்துகளைக் கலந்து கொடுத்து அத்துமீறியதுடன், “நீ என்னுடன் இல்லையென்றால் உனது தொழில்முறை வாழ்க்கையை அழித்துவிடுவேன்” எனப் பகிரங்கமாக மிரட்டியுள்ளார். ஒருமுறை அந்த இளைஞரின் இல்லத்திற்கே நேரில் சென்ற லோர்னா, அவரது மனைவியையும் மிகவும் ஆபாசமாகப் பேசி இழிவுபடுத்தியதாகக் கூறப்படுகிறது.
இந்த விவகாரம் குறித்து 2025 மே மாதம் ஜேபி மோர்கன் நிர்வாகத்திடம் புகார் அளிக்கப்பட்ட போதிலும், அவர்கள் முறையான விசாரணை நடத்தாமல் புகாரைத் தள்ளுபடி செய்துள்ளனர். குற்றச்சாட்டிற்கு உள்ளான லோர்னா தொடர்ந்து அதே பதவியில் நீடிக்கும் வேளையில், பாதிக்கப்பட்ட இளைஞரோ மன ரீதியாகப் பாதிக்கப்பட்டுத் தனது வேலையையும் இழந்துள்ளார். நிர்வாகத்தின் அலட்சியப் போக்கினாலேயே, தற்போது நீதி கோரி அவர் நீதிமன்றத்தை நாடியுள்ளதாக அவரது வழக்கறிஞர் தரப்பு வாதிடுகிறது.
லோர்னா ஹஜ்தினி நியூயார்க் மற்றும் ஹார்வர்டு போன்ற முன்னணிப் பல்கலைக்கழகங்களில் பயின்றவர் என்றாலும், அவர் மீது சுமத்தப்பட்டுள்ள இந்தக் குற்றச்சாட்டுகள் பெரும் சர்ச்சையை உருவாக்கியுள்ளன. இருப்பினும், தன் மீதான அனைத்துப் புகார்களையும் அவர் திட்டவட்டமாக மறுத்து வருகிறார். கார்ப்பரேட் கலாச்சாரத்தில் நிலவும் அதிகார துஷ்பிரயோகம் மற்றும் இனவெறிப் போக்குகளை வெளிச்சம் போட்டுக் காட்டும் இந்த வழக்கு, தற்போது அமெரிக்க மற்றும் இந்திய ஊடகங்களில் முக்கிய விவாதப் பொருளாக மாறியுள்ளது.
