ஆடை வடிவமைப்பாளரான ஜாய் கிரிஸில்டா மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை திருமணம் செய்து கொண்டதாகவும் அவரது குழந்தை தனது வயிற்றில் வளர்வதாகவும் கூறியிருந்தார். இது தொடர்பான புகைப்படங்களும் சோசியல் மீடியாவில் வைரலானது. மேலும் மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை ஏமாற்றி விட்டதாக ஜாய் கிரிஸில்டா சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்திருந்தார்.
அதன் பிறகு தன்னை பற்றி அவதூறு கருத்துக்கள் தெரிவிப்பதை தடுக்கவும், அவதூறாக வெளியிட்ட வீடியோக்களை நீக்கவும் உத்தரவிட வலியுறுத்தி மாதம்பட்டி ரங்கராஜ் சென்னை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். மேலும் மாதம்பட்டி ரங்கராஜ் பங்குதாரராக இருக்கும் மாதம்பட்டி தங்கவேலு பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தை ஜாய் கிரிஸில்டா தொடர்புபடுத்தி பேசியதாகவும், இதனால் அந்த நிறுவனத்திற்கு 12.5 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாகவும் மற்றொரு மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுக்களை விசாரித்த நீதிபதி அடுத்த கட்ட விசாரணையை 24ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார். இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய ஜாய் கிரிஸில்டா கூறியதாவது, என் மீது பொய்யான புகாரை கூறுவதாக குற்றச்சாட்டை முன் வைத்துள்ளனர். நான் எந்த அவதூறுகளையும் பரப்பவில்லை. இதுவரை எனக்கும் என் வயிற்றில் வளரும் குழந்தைக்கும் பதில் கூறவில்லை. நான் புகார் அளித்து 20 நாட்கள் ஆகிறது.
இருப்பினும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாதம்பட்டி ரங்கராஜ் தனது செல்வாக்கை பயன்படுத்தி தன்னை யாரும் ஒன்றும் செய்ய முடியாது என்பது போல பேசி வருகிறார் என ஜாய் கிரிஸில்டா கூறினார். மேலும் பேசிக் கொண்டிருந்தபோது ஜாய் கிரிஸில்டா கண் கலங்கினார். இது தொடர்பான வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
