அமெரிக்காவின் தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மையத்தின் (NCTC) இயக்குநராகப் பணியாற்றி வந்த ஜோ கென்ட் (Joe Kent), ஈரான் மீதான போர் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். ராஜினாமாவுக்குப் பிறகு அவர் அளித்துள்ள முதல் பேட்டியில், ஈரான் அணு ஆயுதங்களை உருவாக்கும் நிலைக்கு அருகில் கூட இல்லை என்று அதிரடியாகத் தெரிவித்துள்ளார். இது டொனால்ட் ட்ரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு கூறிவரும் “ஈரானால் உடனடி அச்சுறுத்தல் உள்ளது” என்ற வாதத்திற்கு முற்றிலும் மாறாக அமைந்துள்ளது.
தக்கர் கார்ல்சனுக்கு (Tucker Carlson) அளித்த பேட்டியில் பேசிய ஜோ கென்ட், ஈரானின் முன்னாள் உச்ச தலைவர் ஆயதுல்லா அலி கமெய்னி உயிருடன் இருந்தவரை அந்நாட்டின் அணுசக்தித் திட்டத்தைக் கட்டுப்படுத்தி (Moderating) வைத்திருந்ததாகக் குறிப்பிட்டுள்ளார். “ஈரான் அமெரிக்கா மீது தாக்குதல் நடத்தத் திட்டமிட்டிருப்பதாக எந்த ஒரு உளவுத் தகவலும் இல்லை. செப்டம்பர் 11 தாக்குதல் போன்ற ஒரு பெரிய தாக்குதலை அவர்கள் நடத்தப் போகிறார்கள் என்பது போன்ற செய்திகள் உண்மையில்லை” என்று அவர் தெளிவுபடுத்தினார். மேலும், இஸ்ரேல் கொடுத்த அழுத்தத்தின் காரணமாகவே அமெரிக்கா இந்தப் போருக்குள் இழுத்து விடப்பட்டதாக அவர் பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
ஜோ கென்ட்டின் இந்த கருத்துக்களுக்கு வெள்ளை மாளிகை கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ஜோ கென்ட் ஒரு பலவீனமான அதிகாரி என்றும், அவர் வெளியேறியது நல்லதுதான் என்றும் அதிபர் ட்ரம்ப் விமர்சித்துள்ளார். ஈரானின் அச்சுறுத்தல் குறித்து அமெரிக்காவிடம் வலுவான ஆதாரங்கள் இருப்பதாகக் கூறியுள்ள வெள்ளை மாளிகை, கென்ட்டின் குற்றச்சாட்டுகள் தவறானவை என்று மறுத்துள்ளது. இருப்பினும், அரசின் மிக உயரிய உளவுத்துறை பதவியில் இருந்த ஒருவரே போருக்கு எதிர்ப்பு தெரிவித்து வெளியேறியிருப்பது அமெரிக்க அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
