தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பாளர்களில் ஒருவரான ஆர் பி சௌத்ரியின் இளைய மகன் ஜீவா. இவர் அவர் தந்தை தயாரித்த ‘ஆசை ஆசையாய்’ திரைப்படத்தின் மூலமாக நடிகராக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதன் பின்னர் வரிசையாக பல படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார்.
ஆசை ஆசையாய் மற்றும் தித்திக்குதே திரைப்படங்களில் லவ்வர் பாயாக வந்த ஜீவா அமீர் இயக்கத்தில் கடந்த 2005 ஆம் ஆண்டு வெளியான ராம் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் சிறந்த நடிகர் என்று ரசிகர்கள் மத்தியில் பெயர் எடுத்தார். இதனைத் தொடர்ந்து டிஷ்யூம், பொறி, கோ, நண்பன் என ஒரு பக்கம் கமர்சியல் படங்களில் நடித்தாலும் இடையில் ஈ மற்றும் கற்றது தமிழ் என நடிப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கும் திரைப்படங்களிலும் ஜீவா நடித்து வந்தார்.
தமிழ் சினிமாவின் நம்பிக்கைக்குரிய நடிகர்களில் ஒருவராக வளர்ந்து வந்த ஜீவா திடீரென சில தவறான படங்களை தேர்வு செய்து நடித்ததால் மார்க்கெட்டை இழந்தார். இப்போது அவர் கைவசம் பெரிதாகப் படங்கள் இல்லை. சமீபத்தில் ப்ளாக் என்ற படத்தில் நடித்ததன் மூலம் கவனம் ஈர்த்துள்ளார். இதையடுத்து கார்த்தி அடுத்து நடிக்கும் படத்தில் அவருக்கு வில்லனாக நடிக்கவுள்ளார் என்று சொல்லப்படுகிறது.

இந்நிலையில் ஜீவா சமீபத்தில் அளித்த ஒரு நேர்காணலில் சுவாரஸ்யமானத் தகவலைப் பகிர்ந்துள்ளார். அதில் “பாஸ் என்கிற பாஸ்கரன் படம் கூட நான் நடிக்க வேண்டிய படம்தான். முதலில் அந்த கதை எனக்கு வந்தது. நான் பண்ணலாம் என்று சொன்னபோதே அந்த படத்தின் தயாரிப்பாளர்கள் சீட்டுக்குலுக்கி போட்டு ஆர்யாவைத் தேர்வு செய்துள்ளனர். அடப்பாவிகளா ரெண்டு சீட்டிலும் என் பேரையே எழுதிப் போட்டிருக்கக் கூடாதா என்று நினைத்துக் கொண்டேன்.
ஆனால் அந்த படம் ஆர்யாவுக்கு ஒரு வித்தியாசமான பாதையை செட் பண்ணியது. அதற்கு முன்னர் அவர் அந்த மாதிரி படங்களில் எல்லாம் நடிக்கவில்லை. ஆர்யா சந்தானம் கூட்டணி நல்ல வரவேற்பைப் பெற்றது. நானும் அந்த படத்தின் க்ளைமேக்ஸில் ஒரு ஒரு சிறப்புத் தோற்றத்தில் நடித்தேன்” எனக் கூறியுள்ளார்.
