CINEMA
மனிதன் எப்படி இருக்கணும்-னு.. கேப்டன் குறித்த யாரும் நினைத்துக்கூட பார்க்காத ஒரு கோரிக்கையை வைத்த நடிகர் ஜெயம் ரவி..
நடிகர், அரசியல்வாதி ஆகியவற்றை எல்லாம் தாண்டி ஒரு சிறந்த மனிதராக வாழ்ந்து மறைந்தவர் கேப்டன் விஜயகாந்த். 200-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தது மட்டுமின்றி, சினிமாவில் ஒரு ஹீரோ என்ன சாப்பிடுகிறாரோ அதையே லைட் மேனும் சாப்பிட வேண்டும் என்ற ஒரு புது பாணியை கொண்டு வந்தவர் விஜயகாந்த். சினிமாவை தாண்டி, நிஜ வாழ்க்கையிலும் மக்களுக்காக வாரி வாரி வழங்கியவர், அரசியலிலும் கால் பதித்தார். எப்படியேனும் பதவிக்கு வந்து பல மாற்றங்களை செய்வார் என்ற எதிர்பார்ப்பு அவர் மீது ஏற்பட்ட தருணத்தில், விதியின் செயலால் உடல் நிலை சரியில்லாமல் பேசக் கூட முடியாத படி படுத்த படுக்கையானார். பல வருடங்களாக சிறு குழந்தைப் போல் மாறியவர், கடந்த மாதம் 28-ம் தேதி மண்ணுலகை விட்டு விண்ணுலம் சென்றார்.
சினிமாவிற்கும், நடிகர் சங்கத்திற்கும் அவர் ஆற்றிய தொண்டு என்பது சாதாரணவை கிடையாது. ஒவ்வொரு நடிகரும் அவரைப் பற்றி பகிர்ந்து கொண்ட விஷயங்கள் ஏராளம். அப்படியிருக்க அவர் இறந்து 2 வாரங்களுக்கு மேல் ஆகியும் அவருக்காக நினைவஞ்சலி நிகழ்ச்சி நடத்தவில்லை ஏன்? என பல கேள்விகள் கோலிவுட்டில் எழுப்பப்பட்டது. பல முன்னணி ஹீரோக்கள் வெளிநாடுகளில் சூட்டிங்கில் இருந்ததால் நினைவஞ்சலிக்கு ஏற்பாடு செய்ய முடியவில்லை என பல காரணங்கள் கூறப்பட்டது. இறுதியாக கடந்த 19-ம் தேதி அவருக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் நினைவேந்தல் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் கமல்ஹாசன், விஷால், விக்ரம், ஜெயம் ரவி உட்பட பல கலைஞர்கள் கலைந்து கொண்டு, விஜயகாந்த் குறித்தும், அவருடன் அனுபவித்த அனுபவங்கள் குறித்தும் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டனர்.
அந்த வகையில், நடிகர் ஜெயம்ரவி, விஜயகாந்த் குறித்து சிறு உரை ஒன்று நிகழ்த்தினார். அதில் அவர் பேச முடியாமல் தடுமாறியது அனைவரையும் கண்கலங்க செய்தது. எல்லாரும் இறந்தால்தான் கடவுள் ஆவார்கள். சிலர்தான் வாழும்போதே கடவுள் ஆவார்கள், அதுபோன்றவர்தான் கேப்டன் விஜயகாந்த் என்று தெரிவித்தார். அவர்குறித்த பல அனுபவங்கள் தனக்கு இருந்தாலும் அதை ஷேர் செய்யக்கூட தோன்றவில்லை என்றும் தானே தன்னுடைய இதயத்தில் வைத்துக் கொள்வதாகவும் ஜெயம்ரவி குறிப்பிட்டார். ஆனால் அவர் நமக்காக அதிகமான விஷயங்களை ஷேர் செய்துள்ளதாகவும் அதிகமாக நமக்காக விட்டுவிட்டு சென்றுள்ளதாகவும் ஜெயம்ரவி பாராட்டு தெரிவித்தார்.
பள்ளி பாடப்புத்தகங்களில் கேப்டனின் வாழ்க்கை குறித்து வர வேண்டும் என்பதே தன்னுடைய கோரிக்கை என்றும் ஜெயம் ரவி கேட்டுக் கொண்டார். ஒரு நடிகராக, அரசியல்வாதியாக அவரின் வாழ்க்கை பள்ளி பாடப் புத்தகத்தில் இடம்பெற வேண்டும் என்று தான் கேட்கவில்லை என்றும் ஒரு மனிதன் எப்படி வாழ வேண்டும் என்பதற்கு உதாரணமாக அவரை குறிப்பிட வேண்டும் என்றும் ஜெயம் ரவி கேட்டுக் கொண்டார். மற்றபடி அவர்குறித்து பேச வார்த்தைகள் வரவில்லை என்று குறிப்பிட்ட ஜெயம்ரவி, விஜயகாந்த் வார்த்தைகளையே தானும் குறிப்பிட விரும்புவதாக, சத்ரியனுக்கு சாவில்லை என்றுகூறி தன்னுடைய உரையை முடித்துக் கொண்டார்.