நடிகர் விஜய் அரசியலுக்கு வரும் முன் நடித்துள்ள இறுதித் திரைப்படமான ‘ஜனநாயகன்’, தணிக்கை வாரியத்தின் பல்வேறு சிக்கல்களால் வெளியாவதில் தொடர்ந்து தாமதம் ஏற்பட்டு வருகிறது. எச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படம் பொங்கல் அன்றே வெளியாக வேண்டிய நிலையில், மறு தணிக்கைக்காக ‘ரிவைசிங் கமிட்டி’ வசம் சென்றது. இந்த குழுவினர் இன்று படத்தை ஆய்வு செய்து சான்றிதழ் வழங்குவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், உறுப்பினர் ஒருவருக்கு ஏற்பட்ட திடீர் உடல்நலக் குறைவால் அந்தத் திரையிடல் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
இந்தத் தடையால் படத்தின் ரிலீஸ் தேதி மீண்டும் தள்ளிப்போகும் சூழல் உருவாகியுள்ளதால், பெரும் பொருட்செலவில் படத்தை தயாரித்துள்ள கே.வி.என் நிறுவனம் வட்டி மற்றும் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளது. விஜய்யின் திரைப்பயணத்தில் மிக முக்கியமான படமாகக் கருதப்படும் ‘ஜனநாயகன்’ எப்போது வெளியாகும் என்பது தெரியாமல் ரசிகர்கள் பெரும் ஏமாற்றத்தில் உள்ளனர். அடுத்த ஆய்வு எப்போது நடக்கும் என்பது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் இல்லாததால் படக்குழுவினர் மிகுந்த அதிருப்தியில் உள்ளதாகக் கூறப்படுகிறது.
