ஹெச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடித்த ‘ஜன நாயகன்’ படத்துக்கு தணிக்கை சான்றிதழ் கிடைக்காத நிலையில் படம் வெளியாவதில் தொடர்ந்து சிக்கல் நீடிக்கிறது. ஜனநாயகன் படம் தொடர்பாக வருகின்ற ஜனவரி 21 ஆம் தேதி நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணை நடைபெற உள்ளது. இதனிடையே பொங்கல் விடுமுறை வசூலை குறிவைத்தும் ரசிகர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றும் வகையிலும் படத்தை பொங்கலுக்குள் ரிலீஸ் செய்வதற்கான நடவடிக்கைகளை படக்குழுவினர் மேற்கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
இந்நிலையில் ஜனநாயகன் சென்சார் விவகாரத்தில் படக்குழு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்த நிலையில் உச்சநீதிமன்றத்தை தயாரிப்பு நிறுவனம் நாடியுள்ளது. இதனை தொடர்ந்து சென்சார் போர்டும் சுப்ரீம் கோர்ட்டில் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளது. அதில் தங்கள் தரப்பு வாதத்தை கேட்காமல் உத்தரவு பிறப்பிக்க கூடாது என கேட்டுக் கொண்டுள்ளது. தணிக்கை சான்றிதழ் சிக்கல் தீரும் என எதிர்பார்த்த விஜய்க்கு சென்சார் போர்டின் நடவடிக்கை அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
