தவெக அமைச்சரவையில் தங்கள் கட்சிக்கு இடம் கிடைத்ததால் திமுகவுடனான கூட்டணி முறிந்துவிட்டதாகக் கூற முடியாது என்று இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (IUML) தலைவர் காதர் மொகிதீன் தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் பெரும்பான்மை இல்லாத தவெக அரசுக்குத் தொடக்கத்தில் வெளியில் இருந்து ஆதரவளிப்பதாகக் கூறிவிட்டு, தற்போது அமைச்சரவையில் இணைந்தது அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. இது குறித்து தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், தற்போதைய சூழல் நிர்வாக ரீதியானது மட்டுமே என்றும், திமுகவுடனான உறவு முற்றிலும் துண்டிக்கப்படவில்லை என்றும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.
திமுக மற்றும் தவெக ஆகிய இரு கட்சிகளுடனான தங்களின் எதிர்கால அரசியல் நிலைப்பாடு குறித்துப் பேசிய அவர், “தேர்தல் காலத்தில் எங்களது இறுதி முடிவை முறைப்படி அறிவிப்போம்” என்று திட்டவட்டமாகக் குறிப்பிட்டுள்ளார். தவெக அமைச்சரவையில் பங்கேற்றிருந்தாலும், வரும் பொதுத்தேர்தல் கூட்டணியை அப்போதைய அரசியல் சூழலை ஆராய்ந்தே முடிவு செய்வோம் என அவர் கூறியுள்ளார். இந்த அறிவிப்பு தமிழக அரசியல் களத்தில், குறிப்பாகக் கூட்டணி கட்சிகளிடையே புதிய பரபரப்பையும் விவாதங்களையும் ஏற்படுத்தியுள்ளது.
