ஈரான் மீதான இஸ்ரேலியத் தாக்குதலில் அந்நாட்டின் உச்ச தலைவர் கமேனி குடும்பத்துடன் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, மத்திய கிழக்கில் போர் மேகங்கள் சூழ்ந்துள்ளன. இதற்குப் பழிவாங்கும் நடவடிக்கையாக ஈரான், இஸ்ரேல் மற்றும் அமெரிக்கப் படைகள் நிலை கொண்டுள்ள வளைகுடா நாடுகள் மீது கடும் தாக்குதல்களைத் தொடுத்து வருகிறது. குறிப்பாக, உலக கச்சா எண்ணெய் போக்குவரத்தின் முக்கியப் பாதையான ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) ஈரான் மூடிவிட்டதால், இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு எண்ணெய் விநியோகம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. தனது நட்பு நாடுகளைத் தவிர மற்ற நாடுகளின் கப்பல்களுக்கு அனுமதி இல்லை என ஈரான் அறிவித்துள்ளதால், உலகெங்கும் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டு ஹோட்டல்கள் உள்ளிட்ட வணிக நிறுவனங்கள் முடங்கும் நிலை உருவாகியுள்ளது.
மறுபுறம், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், “ஈரானை நாங்கள் முழுமையாக அழித்துவிட்டோம், அங்கு ஆட்சி மாற்றம் ஏற்பட்டுவிட்டது, இன்னும் இரண்டு வாரங்களில் போர் முடிவுக்கு வரும்” என்று நம்பிக்கையுடன் பேசி வருகிறார். ஆனால், கள நிலவரம் டிரம்ப் கூறுவதற்கு மாறாகவே உள்ளது. ஈரானிய ராணுவம் சமீபத்தில் அமெரிக்காவின் அதிநவீன A-10 WARTHOG தாக்குதல் விமானம் மற்றும் F-15E போர் விமானம் ஆகிய இரண்டையும் சுட்டு வீழ்த்தி அமெரிக்காவிற்குப் பேரிடியைக் கொடுத்துள்ளது. அமெரிக்கா போர் முடியப்போவதாகச் சொன்னாலும், ஈரானின் இந்த அதிரடித் தாக்குதல்கள் போரின் தீவிரம் குறையவில்லை என்பதையே காட்டுகின்றன.
இந்நிலையில், செய்தியாளர்களைச் சந்தித்த டொனால்ட் டிரம்ப், ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறந்து ஈரானின் எண்ணெய் வளத்தைக் கைப்பற்றத் தங்களுக்கு இன்னும் சிறிது கால அவகாசம் மட்டுமே தேவை எனத் தெரிவித்துள்ளார். “ஈரானின் எண்ணெய் வளம் உலகச் சந்தைக்குக் கிடைத்தால், அது ஒட்டுமொத்த உலக பொருளாதாரத்திற்கே பெரும் பலனைத் தரும்” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். கச்சா எண்ணெய் தட்டுப்பாட்டால் உலக நாடுகள் தவித்து வரும் சூழலில், ஈரானின் பிடியில் உள்ள எண்ணெய் வளத்தை மீட்பதே அமெரிக்காவின் அடுத்தகட்ட இலக்காக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
