ஹைதராபாத்தில் போக்குவரத்து அபராதங்களைத் தவிர்ப்பதற்காகத் தனது சொகுசு காரில் ‘ஜேம்ஸ் பாண்ட்’ பாணியில் உயர் தொழில்நுட்பக் கருவியைப் பொருத்தி, நம்பர் பிளேட்டை மாற்றிய பிஎம்டபிள்யூ (BMW) ஓட்டுநர் ஒருவர் போலீசாரிடம் சிக்கியுள்ளார். சனிக்கிழமை இரவு ஜூபிலி ஹில்ஸ் பகுதியில் குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களைக் கண்டறிய நடத்தப்பட்ட சோதனையின்போது இந்த நூதன மோசடி வெளிச்சத்திற்கு வந்தது. ஒரு பொத்தானை அழுத்தினாலே காரின் பதிவு எண்ணை மாற்றக்கூடிய ரிமோட் கண்ட்ரோல் வசதியை அந்த ஓட்டுநர் பயன்படுத்தியது அதிகாரிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
வாகன சோதனையின்போது பிடிபட்ட அந்த நபர், காவல்துறையின் சலான்களில் இருந்து தப்பிக்கத் தனது காரில் டெல்லி மற்றும் தெலங்கானா என இரண்டு மாநிலங்களின் நம்பர் பிளேட்டுகளை மாற்றி மாற்றிப் பயன்படுத்தும் வகையில் மேம்பட்ட அமைப்பை நிறுவியிருந்தார். இதுபோன்ற தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி நம்பர் பிளேட்டை மாற்றும் மோசடி ஹைதராபாத்தில் கண்டறியப்படுவது இதுவே முதல் முறை என்று கூறப்படுகிறது. இதையடுத்து, காவல்துறையினர் அந்த வாகனத்தைப் பறிமுதல் செய்து, சம்பந்தப்பட்ட ஓட்டுநர் மீது வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையில், கடந்த இரண்டு நாட்களில் மட்டும் ஹைதராபாத் முழுவதும் குடிபோதையில் வாகனம் ஓட்டியதாக 466 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் பெரும்பாலானவை இருசக்கர வாகன ஓட்டிகள் (404 வழக்குகள்) என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக 21 முதல் 30 வயதுக்குட்பட்ட இளைஞர்களே அதிகளவில் விதிமீறல்களில் ஈடுபட்டுள்ளனர். பிடிபட்டவர்களில் 16 பேருக்கு நீதிமன்றம் சிறைத்தண்டனை விதித்துள்ளதாகப் போக்குவரத்துத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சைபராபாத் போக்குவரத்து காவல்துறையினரும் வார இறுதியில் நடத்திய சிறப்பு சோதனையில் 240 பேர் குடிபோதையில் வாகனம் ஓட்டியதாகக் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் பலரது இரத்தத்தில் ஆல்கஹால் அளவு மிக அதிகமாக இருந்தது கண்டறியப்பட்டது. சாலைப் பாதுகாப்பை உறுதி செய்யவும், விபத்துகளைத் தவிர்க்கவும் நகரம் முழுவதும் இத்தகைய கடுமையான சோதனைகள் தொடரும் என்றும், விதிமீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காவல்துறை எச்சரித்துள்ளது.
In Jubilee Hills, a drunk driver driving a BMW was caught using a high-tech system to swap number plates and dodge traffic fines, Traffic cops left stunned as the accused tried to fool them with remote operated Chinese flip number plates. Case registered.#Hyderabad pic.twitter.com/Wb0yJXUOEx
— Ashish (@KP_Aashish) April 12, 2026
