அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே போர் மூளும் சூழல் உருவாகியுள்ளதால், மத்திய கிழக்கு நாடுகளில் பெரும் பதற்றம் நிலவி வருகிறது. ஈரானைத் தாக்குவதற்குத் தயாராக அமெரிக்கா தனது போர்க்கப்பல்கள் மற்றும் போர் விமானங்களை எல்லைக்கு அருகே குவித்துள்ளதால், ஈரான் உயர்மட்டத் தலைவர் அயதுல்லா அலி கமேனி பாதுகாப்பு கருதி ரகசிய நிலத்தடி சுரங்கத்திற்குள் பதுங்கியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. நவீனத் தாக்குதல்களைத் தாங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்தச் சுரங்கத்தில் இருந்தே அவர் பாதுகாப்பு ஆலோசனைகளை மேற்கொண்டு வருவதாகக் கூறப்படுகிறது.
ஈரானில் நிலவும் பொருளாதாரச் சீர்குலைவு மற்றும் மக்கள் போராட்டங்களுக்கு அமெரிக்கா பகிரங்கமாக ஆதரவு தெரிவித்து வருவது மோதலை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது. கமேனி சுரங்கத்தில் மறைந்துள்ள நிலையில், அவரது அலுவலகப் பணிகளை அவரது மூன்றாவது மகன் மசூத் கவனித்து வருவதாகவும், அவரே தற்போது முக்கிய நிர்வாக முடிவுகளை எடுத்து வருவதாகவும் தெரிகிறது. அமெரிக்க அதிபர் டிரம்ப் ஈரான் மீது கடும் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், அமெரிக்காவின் அடுத்தகட்ட நகர்வுகள் என்னவாக இருக்கும் என்பதை உலக நாடுகள் உற்று நோக்கி வருகின்றன.
