மேற்காசியாவில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் ஈரான் மீது நடத்தி வரும் தாக்குதல் ஒரு மாதத்தை நெருங்கியுள்ள நிலையில், ஐந்து நாட்களுக்கு ராணுவ நடவடிக்கைகளை ஒத்திவைப்பதாக அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். ஈரானுடன் ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும், விரைவில் ஒரு உடன்பாடு எட்டப்படும் என்றும் டிரம்ப் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இதற்கிடையே, போருக்கான ஆள்சேர்ப்பு தேவையை ஈடுகட்ட அமெரிக்க ராணுவம் தனது வயது வரம்பை 42 ஆக உயர்த்தியுள்ளது. ஆனால், அமெரிக்காவுடன் எவ்வித ரகசியப் பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை என ஈரான் அரசு மற்றும் அதன் பல்வேறு நாட்டுத் தூதர்கள் திட்டவட்டமாக மறுத்து வருகின்றனர்.
இது குறித்துப் பேசிய ஈரான் ராணுவச் செய்தித்தொடர்பாளர் இப்ராகிம் ஜல்பகாரி, அமெரிக்கா இந்தப் போரில் தோல்வியைச் சந்தித்து வருவதாகவும், தற்காப்புக்காகவே டிரம்ப் இத்தகைய பொய்யான தகவல்களைப் பரப்பி வருவதாகவும் சாடியுள்ளார். “உங்களுடைய இயலாமையை ஒப்பந்தம் என்று கூறி உலகை ஏமாற்றாதீர்கள்” என அவர் காட்டமாகத் தெரிவித்துள்ளார். ஈரானின் அணு உலைகள் மற்றும் எரிசக்தி நிலையங்கள் மீதான தாக்குதல் தற்காலிகமாக நிறுத்தப்பட்டாலும், இரு நாடுகளுக்கும் இடையே நிலவும் கருத்து வேறுபாடுகளால் போர் பதற்றம் குறையாமல் நீடிக்கிறது. இதனால் உலக அளவில் கச்சா எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டு பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகள் அவசர நிலையைப் பிரகடனம் செய்துள்ளன.
