“அமைதி பேச்சுவார்த்தையா, சான்ஸே இல்லை”… உலக நாடுகளை அச்சத்தில் ஆழ்த்திய ஈரான் தலைவர் சொன்ன அந்த 3 வார்த்தை…!

By Nanthini on சித்திரை 30, 2026

Spread the love

ஈரானின் அணுசக்தி மற்றும் ஏவுகணைத் திட்டங்கள் நாட்டின் தேசிய சொத்துக்கள் என்றும், அவற்றைத் தற்காத்துக் கொள்வது ஒவ்வொரு ஈரானியரின் கடமை என்றும் ஈரான் தலைவர் முஜ்தபா கமேனி தெரிவித்துள்ளார். அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே முதற்கட்ட அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்த நிலையில், இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தைக்கான முயற்சிகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்தச் சூழலில், ஈரானின் நிலம், நீர் மற்றும் வான்வெளியைப் பாதுகாப்பதைப் போலவே, அதன் அணுசக்தி மற்றும் ஏவுகணைத் திறன்களையும் ஈரான் உறுதிபடப் பாதுகாக்கும் என அவர் பேசியிருப்பது சர்வதேச அரசியலில் பெரும் விவாதங்களைக் கிளப்பியுள்ளது.

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், ஈரானின் அணுசக்தித் திட்டங்களைக் கட்டுப்படுத்த புதிய ஒப்பந்தத்தைக் கொண்டுவர தீவிர முயற்சி எடுத்து வருகிறார். இத்தருணத்தில் கமேனியின் இத்தகைய அதிரடி அறிக்கை, அமெரிக்காவை கடும் அதிருப்திக்குள்ளாக்கியுள்ளது. ஈரான் தனது பிடிவாதமான போக்கை வெளிப்படுத்துவதால், அடுத்தகட்ட பேச்சுவார்த்தை நடைபெறுமா என்பதில் தற்போது பெரும் சந்தேகம் எழுந்துள்ளது. அறிவியல், நானோ டெக்னாலஜி மற்றும் பயோ டெக்னாலஜி உள்ளிட்ட ஈரானின் அடையாளமாக விளங்கும் அனைத்துத் துறைகளும் பாதுகாக்கப்படும் என அவர் குறிப்பிட்டிருந்தாலும், ஏவுகணைத் திட்டம் குறித்த அவரது கருத்துதான் அமெரிக்காவை ‘டென்ஷன்’ ஆக்கியுள்ளது.

   

இந்த இரு நாடுகளின் மோதலால் உலக நாடுகள் பெரும் பொருளாதாரச் சிக்கலைச் சந்தித்து வருகின்றன. குறிப்பாக, உலக எண்ணெய் வர்த்தகத்தில் 20% நடைபெறும் ஹார்முஸ் நீரிணை (Strait of Hormuz) மூடப்பட்டிருப்பது, இந்தியா போன்ற நாடுகளுக்கு எரிபொருள் தட்டுப்பாட்டை ஏற்படுத்தும் அபாயத்தை உருவாக்கியுள்ளது. போர் எப்போது முடிவுக்கு வரும் என ஒட்டுமொத்த உலகமும் எதிர்பார்த்துக் காத்திருக்கும் வேளையில், ஈரானின் இந்த ஆவேசமான பேச்சு அமைதி முயற்சிகளில் மண்ணை அள்ளிப் போட்டது போல் அமைந்துள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். இதனால் உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயரும் அச்சமும் மேலோங்கியுள்ளது.